கச்சத்தீவை மீட்பதுதான் மீனவர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு - தங்கச்சி மடத்தில் ஸ்டாலின் பேச்சு
பிரிட்ஜோ மரணத்திற்கு நீதி கேட்டு தங்கச்சிமடத்தில் 5வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறின
ராமேஸ்வரம் : கச்சத்தீவை மீட்பதுதான் மீனவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரே வழி என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்கான நடவடிக்கையை எடுக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின் கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான மீனவர் பிரிட்ஜோவின் படுகொலையை கண்டித்து தங்கச்சிமடத்தில் ஐந்தாவது நாளாக போராட்டம் தொடர்கிறது. கச்சத்தீவு அருகே திங்கள் கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ,21 உயிரிழந்தார். காயமடைந்த மீனவர் ஜெரோன்,27 ராமநாதபுரம் தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மீனவர் பிரிட்ஜோ படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரியும் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து 5வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும். மீனவர்கள் மீது இனிமேல் தாக்குதல் நடை பெறாது என தங்கச்சிமடத்துக்கு வந்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் உறுதி அளிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.
இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வரை மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்கப்போவதில்லை என மீனவ சங்கங்கள் அறிவித்துள்ளன. மீனவர்களின் போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டாலின் நேரில் ஆறுதல்
தங்கச்சிமடத்தில் 5வது நாளாக இன்று போராட்டம் நீடிக்கிறது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார். பலியான பிரிட்ஜோவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பிரிட்ஜோ உடல் இருக்கும் பிணவறைக்குச் சென்ற ஸ்டாலின் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
மத்திய அரசு கண்டிக்கவில்லை
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், 21 வயது இளைஞர் பிரிட்ஜோவை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவிக்க தங்கச்சிமடம் வந்தேன். இங்கு 5வது நாளாக போராட்டம் நடக்கிறது. 5 நாட்கள் போராட்டம் நடைபெற்றும், இதுவரை மத்திய அரசு சார்பில் இலங்கை அரசை கண்டிக்கவோ, தட்டிக்கேட்கவோ இல்லை என்றார்.
உறுதிமொழி தேவை
அரசு வழங்கிய ரூ.5 லட்சம் இழப்பீடு எங்களுக்கு தேவையில்லை. இது போன்ற துயர சம்பவம் எந்தவொரு மீனவர்களுக்கும் இனி ஏற்படக்கூடாது என்ற உறுதிதான் தேவை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமான உறுதிமொழியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அல்லது வெளியுறவுத்துறை செயலாளர் நேரிடையாக வந்து பதில் அளிக்க வேண்டும் என மீனவர்கள் கேட்டும், இதுவரை யாரும் வரவில்லை.
கச்சத்தீவு மீட்பு
தி.மு.க. சார்பில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதன் நகலை தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, சம்பந்தப்பட்ட அமைச்சகத்தில் நேரில் கொடுத்துள்ளார். மீனவர்களின் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து, கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி. அதற்கான நடவடிக்கையை எடுக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
திமுக ஆதரவு தரும்
கடந்த 2012ஆம் ஆண்டு கேரள மீனவர்கள் 2 பேர் இத்தாலி கடற்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியானார்கள். இந்த விஷயத்தில் கேரள அரசு அழுத்தம் கொடுத்ததால் இத்தாலி கடற்படை கப்பல் சிறைபிடிக்கப்பட்டு கொச்சியில் நிறுத்தப்பட்டது. இத்தாலி கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பலியான மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசும், தமிழக அரசும் மீனவர் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. இந்த விஷயத்தில் மீனவர் கோரிக்கை மற்றும் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும். அவர்களது நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.