கேரளாவுக்கு உணவுப் பொருட்கள் செல்வதைத் தடுக்கும் போராட்டம்- சீமான் அறிவிப்பு
நெல்லை: சிறுவாணி தண்ணீரைத் தடுத்து தமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் கேரளாவுக்குப் பாடம் புகட்டும் வகையில், கேரளாவுக்கு உணவுப் பொருட்கள் செல்வதைத் தடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

நெல்லை சந்திப்பு பகுதியில் நடந்த கட்சிக் கொடியேற்று விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தற்போதைய மத்திய அரசு, காங்கிரஸ் கட்சியை விட தமிழர்களின் நலனில் சிறப்பாக செயல்படும் என்று எண்ணுகிறோம். தமிழகத்தை அண்டை மாநிலங்கள் மிகவும் வஞ்சிக்கின்றன. கர்நாடகம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறது.
உச்சநீதிமன்றம் முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்று அறிவித்தவுடன், சிறுவாணியில் தண்ணீரை கேரள அரசு அடைக்கிறது. கேரளாவில் உள்ள தமிழர்கள் மீது பல பொய் வழக்குகளை தொடர்ந்து வருகிறார்கள்.
தமிழகத்திற்கு தண்ணீர் தரமறுக்கின்ற கேரளாவிற்கு அரிசி, உணவு பொருட்கள், பால் உள்ளிட்ட எந்த பொருட்களையும் தரமாட்டோம் என்று கூறி தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்கின்ற உணவு பொருட்களை கொண்டு செல்லவிடாமல் தடுத்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் 24-ந்தேதி கோவையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications