தாறுமாறாக வந்த எக்ஸிட் போல்! அடித்துபிடித்து செண்பகத்தோப்புக்கு பலாப்பழத்துடன் சென்ற ஓபிஎஸ்!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குலதெய்வ கோயிலில் ஓபிஎஸ், தனது சின்னமான பலாப்பழத்தை வைத்து பூஜை செய்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். அவருக்கு பலாப்பழச் சின்னம் ஒதுக்கப்பட்டது.

இந்த தேர்தலில் ஓ. பன்னீர் செல்வத்தின் பெயரை கொண்ட 5 பேர் சுயேச்சையாக களமிறங்கினர். மதுரை மாவட்டம் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் ஓபிஎஸ் மனுத்தாக்கல் செய்த தினத்தன்றே தாக்கல் செய்தார்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே தெற்கு காட்டூரைச் சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் என்பவரும், மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வாகைக்குளத்தைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் என்பவரும், மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் என்பவரும் அடுத்த நாள் மனுதாக்கல் செய்தனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாளி, பலா, திராட்சை ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை தனக்கு ஒதுக்குமாறு கோரியுள்ளார். இந்த நிலையில் வாளி சின்னத்தை ஒச்சாத்தேவர் மகனான பன்னீர் செல்வமும் கேட்டிருந்தார். இதனால் குலுக்கலில் ஒச்சாத்தேவரின் மகனுக்கு கிடைத்தது. அது போல் ராமநாதபுரம் தெற்கு காட்டூரை சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர் செல்வத்திற்கு கண்ணாடி டம்ளர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ராமநாதபுரம் கங்கைகொண்டானை சேர்ந்த மலையாண்டி மகன் பன்னீர்செல்வத்துக்கு பட்டாணி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதுரை சோலை அழகுபுரத்தை சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வத்துக்கு திராட்சை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வத்துக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது.
இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகையில், "முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு குடைச்சலைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் ஆதரவாளர்கள்தான் ஒரே பெயர், இன்ஷியலைக் கொண்ட நபர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்குரிய அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டு இந்தச் செயலில் ஈடுபடுகின்றனர்" என்றனர்.
ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், செண்பகத்தோப்பு வனப்பேச்சி அம்மன் கோயில் ஆகியவைகளில் ஓபிஎஸ் நேற்றைய தினம் சுவாமி தரிசனம் செய்தார்.
இதில் செண்பகத்தோப்பு வனப்பேச்சி அம்மன் கோயிலில் தனது சின்னமான பலாப்பழத்தை வைத்து ஓபிஎஸ் வழிபட்டார். நேற்று முன் தினம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அதில் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ் கனி வெல்வார் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications