ஸ்ரீரங்கத்தில் ஓ.பன்னீர்செல்வம்!
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் தொகுதி வரும் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
ஜெயிலுக்குப் போய்விட்டு வந்த ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. ஆனால், ஒட்டு மொத்த அமைச்சரவையும், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாநிலம் முழுவதும் உள்ள கட்சியின் நிர்வாகிகள் ஸ்ரீரங்கத்தில் தான் குடியிருந்து வருகின்றனர்.
ஏராளமான வீடுகள் அதிமுகவினரால் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ள நிறைந்துள்ளன.
வழக்கமாக இடைத் தேர்தல் பணிகள் ஓ.பி. தலைமையில் தான் நடக்கும். பட்டுவாடாவில் ஆரம்பித்து பின்பலம் வரை அனைத்தும் அவர் கண்காணிப்பில் நடக்கும். இந்த முறை முதல்வராக இருப்பதால் அவரிடம் அந்தப் பணி தரப்படவில்லை. ஆனாலும் அவருக்குப் பதில் அவர்களது மகன்கள் தான் பிரச்சாரத்தை மையமாக இருந்து நடத்தி வருகின்றனர்.
அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என களத்தில் இருந்தாலும் உண்மையான போட்டி அதிமுக, திமுக இடையே தான்.
அதிமுக சார்பில் போட்டியிடும் வளர்மதியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றிரவு விமானம் மூலம் திருச்சி வந்தார். அவரை அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். இன்று காலை 11 மணிக்கு தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசுகையில்,
ஸ்ரீரங்கம் தொகுதியில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை புரட்சித் தலைவி, இதய தெய்வம், அம்மா அவர்கள் மக்களுக்கு வழங்கியுள்ளார். இது அ.தி.மு.க. வெற்றிக்கு சாதகமாக அமையும்.
அரசின் நலத்திட்டங்கள் குறித்து வீடு வீடாக சென்று வாக்காளர்களிடம் அ.தி.மு.கவினர் கூற வேண்டும். தேர்தல் நாளில் வாக்குப்பதிவு சதவீதத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். வாக்குப்பதிவு குறையும் பட்சத்தில் அந்தந்த பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழுவை சேர்ந்த அ.தி.மு.கவினர் வாக்காளர்களை அழைத்து வந்து அனைவரையும் வாக்களிக்க செய்ய வேண்டும் என்றார்.
பின்னர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அவர் டெல்லி கிளம்பிச் சென்றுவிட்டார்.