தினகரனை சந்திக்கவில்லை என்று பதில் அளிக்க முடியாமல், ஓபிஎஸ், ஆதரவாளர்கள் தடுமாறுவது ஏன்?
Recommended Video
சென்னை: 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்' துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தாரா என்ற கேள்விக்கு பன்னீர்செல்வம் தரப்பிலேயே மழுப்பலாக பதில் கிடைத்து வருகின்றன.
டிடிவி தினகரன் உடன் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வருடம் ஜூலை 12ஆம் தேதி கோட்டூர்புரம் இல்லத்தில் வைத்து சந்தித்து பேசினர். அதில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார் என்று கூறியிருந்தார், தினகரன் ஆதரவாவாளர், தங்க தமிழ்ச்செல்வன்.
இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த தினகரனும் இந்த சந்திப்பு நடந்தது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார்.
[ என்ன நடக்கிறது தமிழகத்தில்.. 6 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடந்த பரபரப்பு அரசியல் நிகழ்வுகள் ]
தினகரன் பிரஸ் மீட்
நான் பேசியது தவறுதான், என்னை மன்னித்து விடுங்கள் என்று என்னிடம் பன்னீர்செல்வம் கூறியதோடு, என்னோடு இணைந்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்று தினகரன் தெரிவித்தார். அதிமுகவிற்குள், குழப்பத்தை ஏற்படுத்த தினகரன் செய்யும் முயற்சி என்று அமைச்சர் தங்கமணி இந்தத் தகவல்களைக் குறிப்பிட்டுத் தெரிவித்தார். மேலும், தினகரன்தான், அதிமுகவுடன் இணைந்துகொள்ள தூது விட்டு வருகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து நேரடியாக இதுவரை பதில் வர மறுக்கிறது.
மழுப்பல் பதில்தான்
திருச்சியில் ஓ.பன்னீர்செல்வத்திடம், நிருபர்கள், தங்க தமிழ் செல்வன் பேட்டி குறித்து கேள்வி எழுப்பிய போது, அப்படி ஒரு சந்திப்பு நடக்கவில்லை என்று நேரடியாக பதிலளிக்கவில்லை ஓபிஎஸ். ஆனால், தங்கதமிழ்செல்வன் பேட்டியை நான் பார்க்கவில்லை. முழுமையாக பார்த்துவிட்டு விளக்கமாக தெரிவிக்கிறேன் என்று கூறிய ஓபிஎஸ்ஸ, மேற்கொண்டு, செய்தியாளர்கள் கேள்விகளை தவிர்த்து விட்டு அங்கிருந்து கிளம்புவதை குறிக்கோளாக கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
சந்திக்கவில்லை என கூறவில்லை
அதேபோல பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமியிடம், டிவி சேனல் ஒன்று இது தொடர்பாக பேட்டி கண்டது. அப்போது தினகரன் கூறுவதைப்போல, அவருடன் பன்னீர்செல்வம் சந்தித்தாரா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல், "சந்திப்பு நடந்ததா இல்லையா என்பதைவிட, பன்னீர்செல்வம் அதிமுக ஆட்சியை காக்க பாடுபட்டவர் என்பதைத்தான் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நிச்சயமாக சந்தித்து இருக்கமாட்டார்" என்று தெரிவித்தார் முனுசாமி. சந்திக்கவில்லை என்று கூறுவதற்கும், சந்தித்து இருக்கமாட்டார் என்று சந்தேகத்தோடு கூறுவதற்கும் வித்தியாசம் உள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ஆதாரம்
பன்னீர்செல்வம், தினகரன் சந்தித்ததற்கான ஆதாரங்கள் தினகரன் தரப்பிடம் இருக்கிறதாமே என்ற கேள்விக்கு முனுசாமி பதிலளிக்கையில், "ஆதாரங்கள் இருக்கலாம். ஏனெனில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார் ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள். எனவே இவர்களுடன் கடந்த காலங்களில் சந்தித்து இருக்க வேண்டிய தேவை இருந்திருக்கலாம். அந்த புகைப்படங்களை காட்டி இந்த குற்றச்சாட்டுகளுத்து வலு சேர்க்க முயற்சிக்கக் கூடும்" என்று முனுசாமி பதிலளித்தார். இதன் மூலம் ஆதாரங்களை அவர்கள் காட்டினாலும், அதற்கான பதிலை இப்போதே முனுசாமி தெரிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.