ஒரு நாள் மதுக் கடைகளை அடைத்தால் போதுமா.. காந்தி 'சாந்தி' அடைந்து விடுவாரா?
சென்னை: காந்தியின் நினைவுகளோடு காந்தி ஜெயந்தியை கொண்டாடி முடித்து விட்டோம். நம் தேச தந்தைக்கு உரிய மரியாதையாய் செய்து விட்டோமோ என்பது கேள்விக்குறியே. அவரின் கனவுகள் பல இன்னும் நிறைவேறாமல் கிடக்கிறது.
நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு பெண் சுதந்திரமாக தெருவில் நடந்து செல்ல ஆசைப்பட்ட அவர் எண்ணங்களும், மதுவை முழுவதுமாக ஒழித்து விட வேண்டும் என விரும்பிய அவர் உள்மனது ஏக்கங்களும் சுதந்திரம் பெற்று இந்தியா இத்தனை வருடங்களை கடந்தும் இன்னும் நிறைவேறாமலேதான் இருக்கிறது.
காந்தி ஜெயந்தி அன்று தவறாமல் அரசு ஒரு நாள் மதுக்கடைகளை மூடி விடுகிறது. இது நல்ல விஷயம் என்று சொல்வதா இல்லை கடனுக்கு செய்கிறார்கள் என்று சொல்வதா என தெரியவில்லை. காந்தி விரும்பிய ஒன்றை நாம் அவர் பிறந்தநாள் அன்று மட்டும் செய்தால் போதுமா. மற்ற நாட்கள் காந்தியை மறந்து விடலாமா?. காந்தியின் கொள்கைகைகளை நம் மனதை விட்டு தூரம் அனுப்பிவிடலாமா?. ஒரே ஒரு நாள் அவர் விரும்பியதை செய்து அவருக்கு உரிய மரியாதையை செலுத்தி விட்டதாக நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளலாமா?.
ஆசானே தவறு என்றால்
மஹாத்மா விரும்பிய மதுவிலக்கு கனவு நிறைவேற வேண்டிய தேசம் இன்று எப்படி இருக்கிறது. மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று மது பாட்டில்களில் மட்டும் எழுதப்பட்டிருக்கிறது. இது குடிமகன்களின் மனதில் அல்லவா எழுதப்பட வேண்டும். இதை செய்யவேண்டிய அரசு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அரசே அல்லவா மதுக்கடைகளை எடுத்து நடத்துகிறது. ஆசானே தவறு என்றால் மாணவர்களின் புத்தி வளருமா அதுபோல தான் நம் நாட்டு குடிமகன்களின் நிலையும்.
பிணம் தின்னும் கழுகு
டாஸ்மாக் என்ற பெயரில் அரசு நடத்தும் மதுக்கடைக்குள் நம் வீதியெங்கும். மதுக்கடைகள் எல்லாப்பக்கமும் இப்போது வேர்விட்டு ஊடுருவி வளர்ந்திருக்கிறது. முன்னெல்லாம் மதுக்கடைகளுக்கு கொஞ்சம் தூரம் போக வேண்டும். இப்போது அப்படியா நிலைமை தெருவுக்கு ஒரு தண்ணீர் குழாய் மாதிரி அல்லவா டாஸ்மாக் எல்லா இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. எட்டிப்போனால் டாஸ்மாக்கில் குடித்து விட்டு வந்து விடலாம் என்ற "சேவையை" வழங்கிய மாநில அரசை நினைத்து அழுவதா இல்லை சிரிப்பதா?. மக்களின் எத்தனையோ தேவைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்க, டாஸ்மாக் சேவையை அரசே வழங்கி இந்த குடிமகன்களின் தாகம் மட்டும் தணிக்கும் அரசின் செயலை என்ன என்று சொல்வது. இது பிணம் தின்னும் கழுகுதனம் தான். யார் என்ன ஆனால் என்ன, என் பணப் பசி தீர வேண்டும் என்ற பார்வை தான் இது.
சாக்குபோக்கு சொல்லி குடித்துக்கொண்டே
பல வீடுகளில் இன்று வேலை முடிந்து வீட்டுக்கு வருபவன் கண்டிப்பாக குடித்து விட்டே வருகிறான். சிலருக்கு உடல் வலிக்கு குடித்தால் தான் சரியாகுமாம். உழைத்து விட்டு வீட்டுக்கு வரும் தந்தை தன குழந்தையை அள்ளி அணைத்துக் கொடுக்கும் முத்தத்தில் கரைந்து போகாத அந்த களைப்பு. அல்லது அவனுக்காகவே காத்திருக்கும் மனைவியின் மாலை நேர தேநீர் துளிகளில் களைந்து போகாதா அந்த சோர்வு?. இந்த சாக்குபோக்கு சொல்லி குடித்துக்கொண்டே இருக்கும் மூடர்கள் தம் மனைவியின் அழுகைக்கு, குழந்தையின் நிம்மதியின்மைக்கும் தான் காரணம் ஆவது தெரியாமல் நிம்மதியாக போதையில் தூங்கிவிடுகிறார்கள். பெண்கள் பல பேரின் இரவு கண்ணீரில் கரைவதற்கு இந்த மதுவே காரணம். மதியற்ற மனிதர்களால் சுவைக்கப்படும் மது, மங்கைகளின் நிம்மதியை தினம் குடித்து கொண்டிருக்கின்றது .
விழி பிதுங்கி குழம்பும் குழந்தைகள்
குடித்து விட்டு வரும் தந்தைக்கும் தாய்க்கும் நடுவில் விழி பிதுங்கி குழம்பும் குழந்தைகள் எத்தனை எத்தனை. காலையில் ஒரு தந்தையும் மாலையில் இன்னொரு ஆளாக போதையில் வரும் தந்தையை பார்த்து குழம்பி போகும் குழந்தைகளின் மனநிலைக்கு இவர்கள் காரணம் என்பதை அறியாமல் அன்றாடம் சுகமாய் உறங்கும் சுயநலக்கார குடிமகன்கள்.
குறைக்க முயற்சிப்போம்
மதுவிற்கு என்ன தீர்வு . இதற்கு முடிவு தான் என்ன. இது ஒரு போதை . இது ஒரு அடிமைத்தனம். ஒரு ஆசைக்காக ஒரு ஆர்வத்திற்க்காக என்ன என்று தெரிந்து கொள்ள குடித்து பார்க்க தொடங்குபவர்கள் சிலர். பின் அதற்குள் சிலந்தி வலையில் மாட்டிய பூச்சிகளாய் மாட்டிக்கொண்டு அதிலிருந்து வெளிய வர முடியாமல் தினம் தவிக்கின்ற்றனர். அதை குடிக்காவிட்டால் இன்று பலருக்கு தூக்கம் வருவதில்லை. மொத்தமாய் மதுவை ஒழிக்க முடியாது . மொத்தமாய் குடிப்பதை நிறுத்தவும் முடியாது. அதனால் குடிமகன்கள் குடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக தானே முதலில் குடித்து பழகி இருப்பீர்கள் அது போல தான் மெல்ல மெல்ல அளவுகளை குறைத்து பழகுங்கள். நிறுத்துவது கடினம் என்றால் தினமும் நீங்கள் குடிக்கும் அளவில் பாதி அளவுக்கு குடித்தால் போதும் என்ற அளவில் அடுத்த காந்தி ஜெயந்தி வருவதுற்குள் வந்து விட்டால் பெரிய வெற்றி தான். மாற்றம் ஓன்று தான் மாறாதது. மாற முயற்சி செய்து பார்க்கலாமே.
அரசு என்ன செய்யப் போகிறது?
குடிமகன்கள் முயற்சி செய்வது இருக்கட்டும். குடிமகன்களை தெருவுக்கு ஒரு டாஸ்மாக் கடை வைத்து குடிக்க தூண்டும் அரசு என்ன செய்ய போகிறது. மதுபான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறிய அம்மையாரின் வாக்கை அவர் வழி வந்த அதிமுக அரசு செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். நீதியின் பார்வையில் தப்பு செய்பவனை விட தவறு செய்ய தூண்டுபவனே பெரிய குற்றவாளி. இங்கு தவறு செய்ய தூண்டும் அரசாங்கம் திருந்துமா. மதுக்கடைகளை குறைத்து மக்கள் வாழ்வில் மாற்றங்கள் கொண்டு வருமா. அடுத்த காந்தி ஜெயந்திக்குள் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். கடைகள் எண்ணிக்கையை பாதி ஆக்கினாலே போதும். அரசு சிந்திக்குமா?
- Inkpena சஹாயா