காதலை ஏற்க மறுத்த பட்டதாரி பெண்ணை வீடு புகுந்து கடத்திய வாலிபர்
நெல்லை: பாவூர்சத்திரத்தில் வீடு புகுந்து பட்டதாரி பெண்ணை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வ விநாயகர் தெரசா நகரை சேர்ந்தவர் வசீகரன். மும்பை துறைமுகத்தில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்ற இவர் கடந்த 5 ஆண்டுகளாக பாவூர்சத்திரத்தில் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணமாகி சென்னையில் வசிக்கின்றனர்.
மூன்றாவது மகள் ரோஸாரி. இவர் நாங்குநேரி கல்லூரியில் படித்த போது அதே கல்லூரியில் படித்த பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்த ஜெனிசன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஜெனிசன் ரோஸாரியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இது குறித்து அவர் ரோஸாரியிடம் கூறிய போது அவர் காதலை ஏற்க மறுத்து விட்டார்.
இந்த நிலையில் கல்லூரி படிப்பு முடிந்த பின்பும் ரோஸாரியின் அக்காள் கணவரிடம் அடிக்கடி செல்போனில் பேசி தனக்கு ரோஸாரியை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார் ஜெனிசன். ஆனால் அதற்கு அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வசீகரன் பொருட்கள் வாங்குவதற்காக பாவூர்சத்திரம் சென்றிருந்தார். அப்போது ஜெனிசன் தனது நண்பர்கள் 7 பேருடன் காரில் வசீகரனின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியிடம் ரோஸாரியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அவர் மறுக்கவே அவரை சரமாரியாக தாக்கினார். இதனால் அவர் அலறிய சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அவர்களையும் தாக்கிவிட்டு ஜெனிசன் மற்றும் அவரது நண்பர்கள் ரோஸாரியை கடத்தி சென்றனர்.
இது குறித்து வசீகரன் பாவூர்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பொறுப்பு செந்தாமரை கண்ணன் வழக்குப்பதிவு செய்து ஜெனிசன் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகிறார். பட்டப்பகலில் பட்டதாரி பெண் கடத்தப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.