தமிழக சட்டசபையில் தே.மு.தி.க.வுக்காக தி.மு.க. காங். புதிய தமிழகம் வெளிநடப்பு!
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து தே.மு.தி.க.வினர் சஸ்பென்ட் செய்யப்பட்டது குறித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தி.மு.க., காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். மற்றொரு பிரச்சனையில் பேசுவதற்கு போதுமான நேரம் ஒதுக்கவில்லை எனக் கூறி பா.ம.க. எம்.எல்.ஏ.வும் வெளிநடப்பு செய்தார்.
தமிழக சட்டசபையில் நேற்று சபையின் நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி தே.மு.க.தி.க. உறுப்பினர்கள் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். மேலும் அடுத்த கூட்டத் தொடரிலும் தே.மு.க.தி.க.வினர் சிலர் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து தே.மு.தி.க.வினர் அடுத்த கூட்டத் தொடரிலும் பங்கேற்க தடை விதிக்கப்படுவது என்ற தண்டனை மட்டும் நீக்கப்பட்டது.
இது குறித்து சட்டசபையில் இன்று விளக்கம் அளித்த சபாநாயகர் தனபால், சட்டசபையில் தே.மு.தி.க.வினர் நடந்த விதம் குறித்த வீடியோ காட்சிகளைப் பார்த்து நடவடிக்கை எடுக்க அவகாசம் தேவைப்படுவதால் நடவடிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதே தவிர, யாருடைய கோரிக்கையையும் ஏற்று திருத்தம் செய்யப்படவில்லை என்றார்.
ஆனால் தே.மு.தி.க.வினர் மீதான தண்டனையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேசுவதற்கு அனுமதி கேட்டனர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.
இதனைத் தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதேபோல் இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் கட்சியினருக்கும் சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அவர்களும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பா.ம.க. வெளிநடப்பு
இதேபோல் பா.ம.க. எம்.எல்.ஏ. கணேஷ்குமார் சபையில் பேசிக் கொண்டிருந்த போது அவரது பேச்சை நிறுத்துமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதில் அதிருப்தி அடைந்த கணேஷ்குமார் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கணேஷ்குமார், மக்கள் பிரச்சனைகளைப் பேசுவதற்கு சபையில் போதுமான நேரம் ஒதுக்கப்படவில்லை என்றார்.
2வது முறையாக வெளிநடப்பு
அதன் பின்னர் சபைக்கு தி.மு.க. உறுப்பினர்கள் திரும்பினர். அப்போது தே.மு.தி.க.வின் அதிருப்தி உறுப்பினர் தமிழழகன், மற்றொரு தே.மு.தி.க.வின் அதிருப்தி எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பனுக்கு பதிலாக பேசினார்.
அவர் தமது பேச்சில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை குறிப்பிட்டு விமர்சித்தார். இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. சபை முன்னவரான நத்தம் விஸ்வநாதன், உறுப்பினரின் விமர்சனத்தை சபைக் குறிப்பில் இருந்து நீக்கலாம் என்றார்.
ஆனால் சபாநாயகர் தனபாலோ, சபைக் குறிப்புகளைப் படித்துவிட்டு நடவடிக்கை எடுக்கிறேன் என்றார். இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து 2வது முறையாக வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக குற்றம்சாட்டி 2வது முறையாக வெளிநடப்பு செய்தார்.