பேச்சுவார்த்தைக் குழு கலைப்புக்கு ரஜினியே காரணம்.. மாஃபா பாண்டியராஜன் திகுதிகு
ரஜினி அரசியல் பிரவேசம் குறித்த செய்திகளே, ஓபிஎஸ் அணியின் பேச்சுவார்த்தைக் குழு கலைப்பிற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தொடர்பாக வெளியான செய்திகளே, அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்படுவதற்கு காரணம் என ஓ.பன்னீர்செல்வம் அணி தெரிவித்துள்ளது.
ஓபிஎஸ் அணி சார்பில் அமைக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
அப்போது அவர் கூறுகையில், " எங்கள் அணிக்கு திருவேற்காடு கூட்டத்தில் கிடைத்த ஆதரவை கண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு எங்கள் அணியின் பலத்தை நிரூபிப்போம் .
உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொண்டர்களை முழு வீச்சில் ஒருங்கிணைத்து வருகிறோம். இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, எங்களது அணியின் பலத்தினை நிச்சயம் உலகறியச் செய்வோம்.
ரஜிகாந்தின் அரசியல் பிரவேசம் தொடர்பான எதிர்பார்ப்பால் தொண்டர்கள் ஈர்க்கப்படுவதை தடுக்கவே அதிமுக அணி இணைப்பு பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்பட்டது. எங்கள் அணியில் 140 முன்னாள் எம்.எல்.ஏக்களும், 12 நடப்பு எம்.எல்.ஏ க்கள் மற்றும் எம்.பிக்கள் உள்ளனர்.
அதிமுகவின் 90 சதவீத தொண்டர்களின் ஆதரவும் எங்கள் அணிக்கே உள்ளது. அதனால் நாங்களே உண்மையான அதிமுக என்பதை நிரூபிப்போம்" என்று தெரிவித்தார்.