அ.தி.மு.க அணிகள் இணையாது...ஆனால் கரையும்! அ.தி.மு.க. சீனியர்கள் கணிப்பு
ஜெயலலிதா மறைவால் பிளவுபட்டுக்கிடக்கும் அ.தி.மு.கவில் இணைப்பு என்பது நடக்காது என்றும் அதற்குப்பதிலாக ஒவ்வொரு அணியும் தாமாகவே கரைந்துவிடும் என்றும் அ.தி.மு.க. சீனியர்கள் தெரிவிக்கிறார்கள்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட அதிர்வுகள் மாதங்கள் பல கடந்த நிலையிலும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. தமிழக அரசு நிர்வாகத்திலும் அது பலமாக எதிரொலிக்கத்தான் செய்கிறது.
அதிமுக மட்டுமல்ல மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவும் கூட தினமும் ஜெயலலிதா மரணம் அதிர்வலையை உணர்த்திக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், திசைக்கு ஒன்றாக உடைந்து கிடைக்கும் அ.தி.மு.க. மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு பெரிய கட்சி இமேஜை தக்கவைத்துக்கொள்ள இயலாது என்று அந்தக் கட்சி வட்டாரத்திலேயே முணுமுணுப்பு எழுந்துள்ளது.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் கூட இவ்வளவு குழப்பங்களை அ.தி.மு.க. சந்தித்து இருக்குமா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் அ.தி.மு.கவின் 'நிரந்தர பொதுச் செயலாளரை' போல நடந்துகொள்கிறார்கள் என்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தில்.
ஜெயலலிதாவோட கையில் லகான்
எத்தனை கோஷ்டிகள் இருந்தாலும் அவற்றின் தலைகளை , பிரத்யேக 'லகான்' மூலம் இணைத்து கட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் ஜெயலலிதா. அதனால்தான், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அனிதா அனிதா ராதாகிருஷ்ணன், சேகர் பாபு இப்படி நிறைய செல்வாக்கு மிக்கவர்கள் அ.தி.மு.கவை விட்டுப் போனாலும் மீண்டும் மீண்டும் ஆட்சியில் அவரால் அமர முடிந்தது.
ஒற்றுமை என்றால் என்ன விலை?
ஜெயலலிதா மரணித்த பின்னர் ஒற்றுமை என்ற உணர்வும் அ.தி.மு.கவில் மறைந்து விட்டது. ஓபிஎஸ், இபிஎஸ்,தோப்பு கோஷ்டி, மதுரை ராஜன் செல்லப்பா கோஷ்டி என்று பல குழுக்கள் அ.தி.மு.கவில் தலையெடுத்துள்ளன. ஆளும் அ.தி.மு.கவின் எல்லா பக்கமும் பதவி, பணம், அதிகாரம் என்பதுதான் ஹாட் டாபிக்காக இருக்கிறது.
சிறையில் இருப்போரால் கட்சியை கரை சேர்க்க முடியாது
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலாவாலும், டெல்லி திகார் சிறையிலடைபட்டு கிடைக்கும் டிடிவி தினகரனாலும் கூட அ.தி.மு.கவை ஒருங்கிணைத்துச் செயல்பட வைக்க முடியாது என்கிறார்கள் அக்கட்சி சீனியர்கள். காரணம் விட்டமின் ' ப ' வை முன்புபோல அவர்களால் பாதாளம் வரை பாயவைக்க முடியவில்லை. அதனால் 'வாங்கியே' பழக்கப்பட்ட கரங்கள் இப்போது வேறு பக்கம் திரும்பியுள்ளன.
முடிவுதான் என்ன?
அணிகள் உருவாகிய வேகத்தில் அதிமுக நிரந்தரமாக உடைந்துவிடும் என்று எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் நிலவியது. ஆனால் அவ்வாறு நிகழாமல் கடந்த 5 மாதங்களாக நிலைமை அப்படியேதான் தான் உள்ளது.
ஆட்சி இல்லையென்றால் கட்சியே காலி
இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகி ஒருவரிடம் விசாரித்தோம். அவர் கூறுகையில், " கட்சியின் இப்போதைய நிலைமை கவலைக்கிடமாகவே இருக்கிறது. ஆட்சி மட்டும் இல்லாமலிருந்தால் இந்நேரம் கட்சி காணாமலே போயிருக்கும். அவரவர் தமக்குப் பிடித்த கட்சியில் ஐக்கியமாகி இருப்பார்கள். தினகரன், சசிகலா இரண்டு பேரும் இப்போதும் அ.தி.மு.கவை இயக்கும் சக்திகள்தான். அதனால்தான் இணைப்புப் பேச்சுவார்த்தை நடக்கவே இல்லை" என்றார்.
மோடி வழங்கும் ஆலோசனை
ஆட்சியை எப்படி நடத்துவது என்று எடப்பாடி பழனிச்சாமிக்கும், கட்சியை எப்படி நடத்துவது என்று பன்னீர்செல்வத்துக்கும் டெல்லிக்கு வரவழைத்து வகுப்பெடுக்கிறார் பிரதமர் மோடி. அவரின் ஆலோசனைகள் இன்று அதிமுகவுக்கு பூஸ்ட்.
உண்மையைச் சொன்ன அமித்ஷா
ஹைதராபாத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா,' ஜெயலலிதா வெற்றிடத்தை பாஜக நிரப்பும் ' என்று கூறியுள்ளார். நீண்டகாலமாக இருந்துவந்த கேள்விக்கு அமித்ஷா தெளிவாகப் பதிலளித்துள்ளார்.
கரைந்துவிடும் அணிகள்
இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணியும் வெளியில்தான் வலுவாக இருப்பது போல காட்டிக்கொள்கின்றன. ஆனால், உண்மையில் உள்ளுக்குள் அவ்வளவு டேமேஜை சந்தித்து வருகின்றன இரண்டு அணிகளும். 'கூவத்தூர் ஒப்பந்தம்' நிறைவேற்றப்படவில்லை என்று இபிஎஸ் அணியிலும், 'இன்னும் எவ்வளவு நாளைக்கு கையில் இருப்பதை செலவு செய்வது' என்ற புலம்பல் ஓபிஎஸ் அணியிலும் எழுந்துள்ளன.
அதிருப்தியாளர்களை அரவணைக்கும் பிளான்
பன்னீர் அணியில் கண்ணீர் விடும் நிலையிலிருக்கும் எம்.எல்.ஏக்கள், சில எம்.பிக்கள் எடப்பாடி அணிக்கு இழுக்கும் படலத்தை சில 'ரகசிய நபர்கள்' மேற்கொண்டுள்ளனர். அதே போல அதிருப்தி எம்.எல்.ஏக்கள், அதிருப்தி அமைச்சர்கள் என்று இபிஎஸ் அணியின் பலத்தைக் குறைக்க சில ' 'முன்னாள் ' அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அணிகள் இணையுமா அல்லது கரைந்து காணாமல் போகுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.