அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு ஓபிஎஸ் போட்டி.. கே.பி. முனுசாமி அதிரடி அறிவிப்பு
அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடுவார் என்று கே.பி. முனுசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ் போட்டியிடுவார் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று திடீரென தெரிவித்தார்.
தினகரன் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஓ. பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் இணையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணி அளவில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் இரு அணிகளும் இணைவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எம்பிக்கள் மைத்ரேயன், ராஜேந்திரன், வனரோஜா, எம்எல்ஏக்கள் செம்மலை, ஆறுகுட்டி மற்றும் பி.எச். பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஊழல் கோஷ்டி
இந்தக் கூட்டத்தின் முடிவாக, முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களிடம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, சசிகலா குடும்பத்தாரால் நிர்வகிக்கப்படுகிறது என்றும், அது ஊழல் கோஷ்டி என்றும் குற்றம்சாட்டி பேசினார்.
பகடைக்காய்
மேலும், தினகரனை கட்சியில் இருந்து வெளியேற்ற சசிகலா, நடராஜன், திவாகரன் ஆகியோர் நாடகம் நடத்தியுள்ளனர் என்றும் இதற்கான பகடைக்காயாக பழனிச்சாமி அணியினர் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டிய கே.பி. முனுசாமி, விரைவில் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவார் என்று அறிவித்தார்.
பொதுச் செயலர் ஓபிஎஸ்
ஏற்கனவே, கட்சிக்குள் முறைப்படி தேர்தல் நடத்தி சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனவே, அவரது பொதுச் செயலாளர் பதவியை அங்கிகரிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணியினர் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ஓபிஎஸ் அந்தப் பதவிக்கு போட்டியிடுவார் என்று கே.பி. முனுசாமி அறிவித்துள்ளார்.
குழப்பம்
தினகரன் குடும்பம் அதிமுக அம்மா கட்சியில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்ட பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், ஓ. பன்னீர்செல்வம் அணியும் இணையும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், கே.பி. முனுசாமியின் பேட்டி அரசியல் அரங்கேற்றில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.