அதிமுகவின் இரு அணிகளும் இணையவே விரும்புகிறோம்: ஓ.பன்னீர்செல்வம் உறுதி
அதிமுகவில் உள்ள இரண்டு அணிகளும் இணையவே பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளோம், அதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் முன்னெடுத்துள்ளோம் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
திருநெல்வேலி: அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியும், அதிமுக அம்மா அணியும் ஒன்றிணையவே பேச்சுவார்த்தையை நாங்கள் முன்னெடுத்துள்ளோம் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
நெல்லை வந்திருந்த ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், " இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதற்காக பேச்சுவார்த்தையை முன் எடுத்து வருகிறோம். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அக்டோபரில் நடைபெறும். அதில் கலந்துகொள்ள பிரதமர் மோடியிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஓபிஎஸ் அணியில் பல்வேறு உள்முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்றும், அதனால் அந்த அணியில் இருந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் வெளியேறுகிறார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன. அதே போல எடப்பாடி பழனிச்சாமி அணியும், அதிமுக இணைப்புக்கு சில நிபந்தனைகளை விதித்து இருந்தன.
இந்த நிலையில் இரண்டு அணிகளும் இணைவதில் வாய்ப்புகள் நாளுக்குநாள் குறைவதாக வெளிப்படையாகவே இருதரப்பு நிர்வாகிகளும் பேச ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து நெல்லையில் ஓபிஎஸ் 'அணிகளின் இணைப்புக்காகவே ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்' என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.