நெருக்கடிதீர குலதெய்வ கோவிலில் யாகம் வளர்த்த ஓபிஎஸ் மகன்... தணிந்த ஜெ. கோபம்
மதுரை: ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு பரிகாரம் தேட கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார் அவரது மகன் ரவீந்திரநாத். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குலதெய்வமான பேச்சியம்மனைக் கும்பிட்டு விட்டு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு யாகம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 'பங்குனி மாதத்தில் குலதெய்வத்தை வணங்கி யாகம் செய்தால் பிரச்சினை விலகும் என்பது ஐதீகமாம்.
அதிமுகவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்தப்படியாக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர் அடங்கிய ஐவர் அணி பவர் புல்லாக திகழ்ந்து வந்தது.
இந்த ஐவர் அணியினர் பெருமளவு சொத்துகளை வாங்கி குவித்ததாகவும் எம்எல்ஏ சீட் வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் வசூலித்ததாகவும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து 5 பேரையும் நேரடியாக அழைத்து முதல்வர் எச்சரிக்கை செய்து அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து கடந்த 2 மாதமாக ஐவர் அணியினர் ஓரம் கட்டப்பட்டு வந்தனர். கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது.
ஓ.பன்னீர் செல்வம்
அதிமுகவில் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக வலம் வந்தவர் ஓ.பி.எஸ். இரண்டு முறை ஜெயலலிதா முதல்வராக முடியாமல் போன நிலையில் ஜெயலலிதாவால் சுட்டிக்காட்டப்பட்டு இரண்டு முறையும் முதல்வராக இருந்தவர். ஜெயலலிதாவின் நம்பிக்கை உரியவராக திகழ்ந்த ஓ.பன்னீர் செல்வம் இப்போது கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வருவது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் மகன்
இந்த பிரச்சினை ஒருபக்கம் இருக்க, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத், வியாழக்கிழமையன்று இரவு, 7 மணிக்கு, ஸ்ரீவில்லிபுத்துார், மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார். பின், அங்கிருந்து ஆண்டாள் கோவில் சென்றார். அவரை வரவேற்க, கட்சியினர் யாரும் வரவில்லை. ஆனால், கோவில் செயல் அலுவலர் ராஜாராம் வரவேற்று, அழைத்து சென்றார்.
குல தெய்வ தரிசனம்
முதலில், வடபத்ரசயனர் சன்னிதி, பின் ஆண்டாள் சன்னிதி என, இரவு 8.30 மணி வரை, தரிசனம் செய்தார். இரவில் அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கிய அவர், நேற்று காலை செண்பகதோப்பில் உள்ள, குலதெய்வமான பேச்சியம்மன் கோவில் சென்று, தரிசனம் செய்தார்.
எதிரிகளை வீழ்த்தும் யாகம்
பிரச்னையிலிருந்து விடுபட, பங்குனி மாதத்தில் குல தெய்வத்தை வணங்கினால் நன்மை தரும் என்பதால், அவர் ஸ்ரீவில்லிபுத்துார் வந்ததாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் செண்பகத் தோப்பு பகுதியில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு வேண்டப்பட்ட பெண் டாக்டருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை 3 மணி நேரம் ரவிந்திரநாத் யாகம் நடத்தியதாகவும் அது எதிரிகளை வீழ்த்தும் யாகம் என்றும் கூறப்படுகிறது.
தணிந்ததா கோபம்
இந்த யாகத்தின் பலனாகவே தலைமையின் கோபம் சற்றே தணிந்துள்ளதாகவும், நேற்றைய தினம் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்ததாகவும், எச்சரிக்கைக்குப் பின்னர் கட்சிப் பணிகளில் பங்கேற்க ஜெயலலிதா அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.