எடப்பாடி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த ஓபிஎஸ் கோஷ்டி... "ஷாக்"கில் எதிர்க்கட்சிகள்!
சட்டசபை மானியக் கோரிக்கையின்போது எடப்பாடி அரசுக்கு ஆதரவாக ஓபிஎஸ் அணியினர் வாக்களித்தனர்.
சென்னை: சட்டசபை மானியக் கோரிக்கையின்போது எடப்பாடி அரசுக்கு ஆதரவாக ஓபிஎஸ் அணியினர் வாக்களித்தனர். இது எதிர்க்கட்சிகள் முகத்தில் கரியை பூசியது போல் இருந்தது.
கூவத்தூரில் பேரம் நடந்ததாக கூறப்பட்ட வீடியோ வெளியானதை தொடர்ந்து பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நேற்று சட்டசபை கூடியது. அப்போது வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றன.
அப்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சுற்றச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் பதில் அளித்தனர். இதைத் தொடர்ந்து கேள்வி நேரம் முடிந்தது.
பின்னர் மானியக் கோரிக்கை மீதான குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது பன்னீர் செல்வம் அணியினர் உள்ளிட்ட அனைத்து அதிமுக உறுப்பினர்களும் எடப்பாடி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
எம்எல்ஏ-க்கள் கூவத்தூரில் பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டன. மேலும் அதிமுகவில் பல்வேறு அணிகள் உள்ளதாகவும் கூறப்படும் நிலையில் அனைத்து அதிமுக உறுப்பினர்களும், குறிப்பாக ஓபிஎஸ் அணியினரும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது எதிர்க்கட்சிகளுக்கு மூக்கு அறுப்பட்ட நிலை ஏற்பட்டது.
இதேபோல் எடப்பாடி அரசுக்கு ஆபத்து ஏற்படும் போதும் ஓபிஎஸ் அணியினர் கைகொடுத்து காப்பாற்றுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.