ப.சிதம்பரத்துக்கு இந்தத் தேர்தல் ஒரு சுற்றுலா மாதிரி இருக்கும்.. தா.பாண்டியன்
நாகப்பட்டினம் புதிய பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டக் கிளை சார்பில் தேர்தல் நிதியாக ரூ. 13 லட்சம் வழங்கப்பட்டது.
அதில் பேசிய பாண்டியன், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு மாற்றாக 3-வது அணி உருவாகும்.
தற்போது இந்தியாவில் மோடி அலை வீசுவதாக சொல்கிறார்கள். ஆனால், என்ன தான் சொன்னாலும் பா.ஜ.க. ஜெயிக்கப் போவது இல்லை. மோடி அலை என்பது ஊடகங்களால் ஏற்படுத்தப்படும் மாயை. ஓரிரு வட மாநிலங்களில் வாக்குகள் பெற்றதன் மூலம் பா.ஜ.க. மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் என்பது தவறான கருத்து. தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், ஒடிஸ்ஸா, பிகார், மேற்குவங்கம், அஸ்ஸாம் உள்பட பல மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற வாய்ப்பே இல்லை.
3வது அணி சாத்தியமா, அந்த அணி வெற்றி பெற்றால் யார் பிரதமர் என்ற கேள்விகளுக்கு மக்களவைத் தேர்தல் முடிவுகள் பதிலளிக்கும். தேர்தலின் முடிவில், மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத மாற்றுக் கட்சி அரசு அமைக்கும் என்பது உறுதி.
அரசியலில் நடக்கும் பிரச்சனைகளைவிட தி.மு.க. தலைவர் கலைஞரின் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் தான் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சுற்றுலா செல்லவும், புத்தகம் படிக்கவும் இந்தத் தேர்தல் நேரம் பயனுள்ளதாக இருக்கும் என்றார் தா.பாண்டியன்.