காவிரி பிரச்சனையில் மத்திய அரசு இனக் கலவரத்தை தூண்டுகிறது.. பி.ஆர். பாண்டியன் குற்றச்சாட்டு
மன்னார்குடி: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருப்பதன் மூலம் இரு மாநிலங்களுக்கிடையில் இனக் கலவரத்தை தூண்டுகிறது என்று பி.ஆர். பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தும் அதனை மத்திய அரசு அமைக்கவில்லை. இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று மத்திய அரசு கூறியிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே காலில் போட்டு மிதிக்கும் செயல் இது. நாட்டை பிளவு படுத்துகின்ற முயற்சி. இதன் மூலம் மத்திய அரசு இரு மாநில மக்களிடையே இனக் கலவரத்தை தூண்டி விடுகிறது. கர்நாடகத்தில் வர இருக்கிற சட்டப்பேரவைத் தேர்தலில் சதானந்த கவுடாவை முதலமைச்சராக்கி விட வேண்டும் என்று மோடி உழைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து காவிரிக்காக போராட வேண்டும். அதற்காக நடக்கவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலைக் கூட தள்ளி வைத்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று பி. ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications