கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை ஏரிகள் மீண்டும் உடைப்பு... குடியிருப்புகளில் சூழ்ந்த வெள்ளம்
சென்னை: சென்னையில் விடாமல் கொட்டி வரும் கனமழையால் மாநகரமும், புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை ஏரிகள் நிரம்பி வழியும் நிலையில் அவற்றின் கரைகளை ஆக்கிரமிப்பாளர்கள் உடைத்துவிட்டுள்ளதால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க படகுகளுடன் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். மீட்கப்பட்ட மக்கள் சிறப்பு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
சென்னையில் மீண்டும் மிரட்டி வரும் கனமழையால் கிண்டி, வடபழனி, சைதாப்பேட்டை, அடையாறு, திருவான்மியூர், மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
போக்குவரத்து துண்டிப்பு
சென்னை குரோம்பேட்டை பகுதியில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் ஒரு அடி உயரத்திற்கு வெள்ளம் போல் மழை நீர் ஓடுகிறது. சானடோரியம் ரயில் நிலைய சுரங்கப்பாதையும் மழைநீரில் மூழ்கியது. இதனால் ரயில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும், கிழக்கு தாம்பரம், முடிச்சூர் சாலையிலும் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பள்ளிக்கரணை
பள்ளிக்கரணை, நாராயணபுரம், கோவிலம்பாக்கம் ஏரிகளின் கரைகள் உடைக்கப்பட்டதால், ஏரியை சுற்றியுள்ள பகுதிகள், வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளுக்குள் முழங்கால் அளவிற்கு வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் இரண்டு ஏரிகளின் கரைகள் உடைக்கப்பட்டதால், பள்ளிக்கரணை, நாராயணபுரம் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
மின்விநியோகம் நிறுத்தம்
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்குன்றம், குழல், குளத்தூர், மாதவரம், ராஜமங்கலம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளும் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி,முடிச்சூர் பகுதிகளில் கிருஷ்ணா நகர் பாரதி நகர் பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து உள்ளது.
காற்றுடன் மழை
செங்குன்றத்தில் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக மின்சாரம் தடை செய்யப்பட்டு உள்ளது. அதேப்போன்று முகப்பேர் மேற்கிலும் இன்று காலை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
படகில் மீட்பு
மழை, வெள்ளத்தை சமாளிக்க படகுகளுடன் தயார் நிலையில் இருந்த மீட்புக்குழுவினர், வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு முகாமில் தங்க வைத்துள்ளனர். கடந்த 10 தினங்களுக்கும் மேலாக முகாமில் இருந்து வீடு திரும்பியவர்கள் மீண்டும் முகாமிற்க வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
|
பெருங்களத்தூர் ஏரி உடைப்பு
தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் ஏரியின் கரையில் இன்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. அந்த உடைப்பு வழியாக ஏரி நீர் வெளியேறி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு மீட்பு பணிகளை மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
|
பொதுமக்கள் வெளியேற்றம்
மழை நின்ற பிறகே ஏரியின் உடைப்பை சரி செய்யும் பணிகளும் தொடங்கும். மழை நீடிக்கும்பட்சத்தில் ஏரி நீரில் பெரும்பகுதி வெளியேறி ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதால் குடியிருப்புவாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.