மாயமான மீனவர்கள் எங்கே... குமரியில் தொடரும் மக்கள் போராட்டம்
ஓகி புயலால் மாயமான மீனவர்களின் நிலை என்ன என்று கேள்வி கேட்டு மீனவ மக்கள் குமரியில் போராடி வருகின்றனர்.
நாகர்கோவில்: ஓகி புயலால் மாயமான பல மீனவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. இந்நிலையில் மீனவர்களின் நிலை என்ன என்று கேள்வி கேட்டு, மீனவ மக்கள் குமரியில் போராடி வருகின்றனர்.
கடந்த வாரம் தமிழகத்தை ஓகி என்ற புயல் மிகவும் மோசமாக தாக்கியது. இதனால் கன்னியாகுமரி, கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் காணாமல் போனார்கள். இவர்களில் பலர் இன்னுமும் வீடு திரும்பவில்லை.
ஓகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்க கோரி குமரி மாவட்டத்தில் நேற்று குளச்சல், மணவாளக்குறிச்சி, தேங்காபட்டணம் உட்பட 5 இடங்களில் கருப்புகொடியுடன் மீனவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ''ஓகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். இறந்த மீனவர்களுக்கு கேரள அரசு வழங்குவது போல் ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்'' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குளச்சல், கோடிமுனை, சைமன்காலனி, வாணியகுடி, குறும்பனை, கொட்டில்பாடு அன்னைநகர் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 10 ஆயிரம் பேர் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர்.
முன்னதாக கடலில் பலியான மீனவர்களின் நினைவாக குளச்சல் காணிக்கை அன்னை ஆலயத்தில் பங்குதந்தை எட்வின் தலைமையில் நினைவு திருப்பலி நடந்தது. அப்போது மக்கள் அனைவரும் ஆலயம் முன் திரண்டனர். பின்னர் அவர்கள் பங்குதந்தை எட்வின் தலைமையில் ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவலகம் முன் சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மீனவர்கள் போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இது போல் தேங்காப்பட்டணம் அருகே இணையம் மண்டலத்திற்கு உட்பட்ட 9 கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவமக்கள் சுமார் 3 ஆயிரம் பேர் கருப்பு கொடியுடன் ஊர்வலமாக தேங்காபட்டணம் சந்திப்பில் வந்தனர். அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊர்வலத்திற்கு ஆலஞ்சி வட்டார குருகுல முதல்வர் ஏசுதாசன் தலைமை வகித்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். எஸ்பி துரை தலைமையில் குளச்சல் ஏஎஸ்பி சாய்சரன்தேஜஸ்வி மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது.