இத்தனை பலிகள், துயரங்கள், குளறுபடிகள், சித்தரவதைகள்... தேவைதானா 'கொடூர' நீட்?
நீட் எனும் நாசகார தேர்வால்தான் எத்தனை பலிகள், துயரங்கள், குளறுபடிகள். இத்தேர்வு தேவையா? என்பதுதான் பெற்றோரின் கேள்வி.
Recommended Video
சென்னை: நீட் எனும் கொடூர தேர்வால்தான் எத்தனை பலிகள், துயரங்கள், குளறுபடிகள், சித்தரவதைகள்..இப்படியெல்லாம் வதைத்து நீட் தேர்வு நடத்தத்தான் வேண்டுமா? என்பது பெற்றோர்களின் கேள்வி.
மருத்துவ படிப்புக்காக தேசிய அளவில் ஒரே தேர்வு என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்தது. இதனை தொடக்கம் முதலே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக எதிர்த்தன.
சிபிஎஸ்இ படிப்பு முறை வேறு; மாநில திட்டங்கல் வேறு என்பதால் மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு காவு கொள்ளப்படும் என்ற அச்சத்தால் எதிர்க்கப்பட்டது. ஆனால் மக்கள் விரோத மத்திய அரசும் சிபிஎஸ்இ நிர்வாகமும் நீட்டை திணித்தன.
அண்டை நாட்டு எல்லைகளில் மையங்கள்
இதனால் மனமுடைந்த அரியலூர் அனிதா தூக்கிட்டு கடந்த ஆண்டு இறந்து போனார். இந்த ஆண்டு கொடுமைகளின் உச்சகட்டமாக கேரளாவில் தமிழக மாணவர்கள் 5000 பேருக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. அதைவிட பெருங்கொடுமையாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராஜஸ்தானிலும் சீனா எல்லையில் உள்ள சிக்கிமிலும் தமிழக மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.
எர்ணாகுளத்தில் கிருஷ்ணசாமி மரணம்
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் உச்சநீதிமன்றம் ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்குத்தான் போக வேண்டும் என கறார் காட்டியது. இதனால் பதறியடித்துக் கொண்டு வெளி மாநிலங்களுக்கு தமிழக மாணவர்கள் சென்றனர். இந்த அலைகழிப்பால் திருத்துறைபூண்டி மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி எர்ணாகுளத்தில் மரணித்துப் போனார். அத்துடன் தேர்வு மையங்களுக்குல் சென்ற மாணவிகளை தலைவிரி கோலமாக படு மோசமான சித்ரவதைகள் செய்து அனுப்பி வைத்திருக்கின்றனர்.
கொடுமையான சோதனைகள்
ராணுவ வதை முகாம்களுக்கு செல்லும்போது நடத்தப்படுகிற சோதனைகளையெல்லாம் மிஞ்சியதாகத்தான் இந்த மாணவச்செல்வங்களை வதைத்தனர். இதுமட்டுமின்றி 2 நிமிடம் தாமதமாக வந்ததற்காக பல இடங்களில் மாணவர்களை அனுமதிக்கவில்லை.
தேர்வில் குளறுபடி
இதன் உச்சகட்டமாக சேலம் மெய்யனூரில் வினாத்தாள் வழங்குவதில் தாமதம் என்பதால் நீட் தேர்வு தொடங்கப்படாமல் இருந்தது. சில மணிநேர தாமதத்துக்கு பின் தேர்வு நடைபெற்றது.
5 மணிநேர தாமதம்
இதைவிட அதிர்ச்சி தரும் வகையில் மதுரை நரிமேட்டில் 120 மாணவர்களுக்கு இந்தியில் வினாத்தாள் கொடுத்திருக்கின்றனர். தமிழ் வினாத்தாள் வரும் வரை 5 மணிநேரம் மாணவர்கள் காத்திருக்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மதிய உணவாக பப்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.
நீட் தேர்வு தேவைதானா?
இத்தனை பலிகள், துயரங்கள், குளறுபடிகள், சித்தரவதைகள் நிறைந்த நீட் தேர்வு தானா? ஒரு தேர்வை ஒழுங்காக நடத்த திறனற்ற சிபிஎஸ்இ மீது என்னதான் நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதுதான் பெற்றோரின் கேள்வி.