வீடு வீடாக பட்டுப்புடவை… தங்கமூக்குத்தி தரும் அதிமுக!: பாஜகவின் ஹெச்.ராஜா புகார்
திருச்சி: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் ஆளுங்கட்சியினர் வீடு வீடாக பட்டுப்புடவையும், தங்க மூக்குத்தியும் வாக்காளர்களுக்கு லஞ்சமாக விநியோகிப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காலியாக உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் ஒருபக்கம் கறிவிருந்தும், வேட்டி சேலை, பொருட்கள் என வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுவதாக பாஜக, கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக திருச்சி வந்துள்ள ஹெச்.ராஜா நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கணக்கில் வருமா?
அ.தி.மு.க.வின் கொடி கட்டிய ஆயிரக்கணக்கான கார்கள் ஸ்ரீரங்கம் தொகுதி முழுவதும் நிற்கிறது. இந்த கார்கள் அனைத்தும் வேட்பாளரின் செலவு கணக்கில் வராதா? இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டுப்புடவை மூக்குத்தி
நேற்று முன்தினம் இரவு ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட ஜீயபுரம் அந்தநல்லூர் பகுதியில் வீடு, வீடாக வேட்டி-சேலை, பட்டுப்புடவை வழங்கி இருக்கிறார்கள். தங்க மூக்குத்தியும் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கு தேர்தல் பார்வையாளர்கள் இருக்கிறார்களா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
நேர்மையான தேர்தல்
ஸ்ரீரங்கம் தொகுதியில் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு தங்கியுள்ள வெளிமாவட்டத்தினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
ஆட்சி மாற்றம்
ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவினால் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதில்லை. இந்த நாட்டின் வளர்ச்சிக்காக நடுத்தர, ஏழை மக்கள் வாழ்க்கை முன்னேற எந்த மாதிரியான அரசியல் வேண்டும் என்பதை இந்த தேர்தல் மூலம் மக்கள் தெரிவிக்க வேண்டும். கடந்த 7 மாதத்தில் பெட்ரோல் ரூ.17 குறைந்து உள்ளது. டீசல் ரூ.12 குறைந்து உள்ளது.
மாற்றம் வேண்டும்
1977-ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் இந்தியாவில் ஏறிய பொருட்களின் விலை இறங்கி இருக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் சமையல் கேஸ் சந்தை விலையும் குறையும். ஒவ்வொரு வீட்டுக்கும் மோடி அரசு மூலம் ரூ.1,500 மிச்சம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த அரசியலில் இருந்து ஒரு மாற்றம் வேண்டும் என்றால் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று ஹெச்.ராஜா கேட்டுக்கொண்டார்.