ஆர்.கே. நகரில் டி.டி.வி.தினகரனுக்கு மதிமுக ஆதரவு? வைகோ கூறியது இதுதான்
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் யாருக்கு அதரவு அளிப்பது தொடர்பாக கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நெல்லை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாருக்கு அதரவு அளிப்பது தொடர்பாக வருகிற 18ம் தேதி, கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சகோதரர் ரவிச்சந்திரனின் மகன் திருமணம் நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் நடைபெற்றது.
சுயமரியாதை வழக்கப்படி நடைபெற்ற இத்திருமண நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மாலனி, மலேசியாவின் பினாங்கு துணை முதல்வர் ராமசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா, தமிழருவி மணியன் மற்றும் பல அரசியலில் பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீது காலணி வீசியது கண்டனத்துக்குரியது. கொள்கை ரீதியில் தான் நாம் எதிர்கொள்ளவேண்டுமே தவிர, இதுபோன்ற இழிவான செயல்களில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது. இது மாணவர்களை இழிபடுத்தும் செயல் என்று அவர் கூறினார்.
மேலும் ஆர்.கே நகர் தேர்தலில் ஆதரவு கேட்டு அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்த அழைப்பு குறித்து வருகிற 18ம் தேதி மதிமுகவின் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.