கட்சிகளை உடைப்பது கருணாநிதிக்கு கைவந்த கலை- பேட்டியில் போட்டுத்தாக்கிய வைகோ
சென்னை: தேர்தல் காலத்தில் கட்சிகளைப் பிரிப்பதே திமுக தலைவர் கருணாநிதியின் வேலை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று சென்னையில் உள்ள மதிமுக கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "கட்சிகளை பிரிப்பது தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குணம். உலக மகா மோசடி செய்வதில் கருணாநிதியை யாரும் மிஞ்ச முடியாது.
2006ம் ஆண்டு ம.தி.மு.க.வை ஒழிக்கவும், தாயகத்தை கைப்பற்றவும் அவர் முயற்சி செய்தார். அத்துடன் ம.தி.மு.க.வுக்கு எதிராக போட்டி பொதுக்குழுவை ஏற்படுத்தவும் கருணாநிதி முயன்றார்.
2ஜி ஊழல் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் சேர்த்துள்ளது அக்கட்சி. தே.மு.தி.க தங்கள் கூட்டணியில் சேராததால் கட்சியை உடைக்க தி.மு.க. முயற்சி செய்கிறது. நெல்லை மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் முகமது அலியை தி.மு.க.வுக்கு அழைத்து வருவதற்கு 3 கோடி ரூபாய் பேரம் பேசினார்கள்.
தே.மு.தி.க. தலைமையை விமர்சித்த சந்திரகுமார் விஜயகாந்துக்கு துரோகம் செய்துவிட்டார். சமீபத்தில் தான் அவருக்கு பணப்பட்டுவாடா நடந்திருக்க வேண்டும். கேப்டன் கிணற்றில் குதிக்க சொன்னால்கூட குதிப்பேன் என்று ஆவேசமாக பேசியவர், இப்போது உண்மையிலேயே கிணற்றில் குதித்துவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.