எங்க வேணும்னாலும் ஏறிக்கோ, இறங்கிக்கோ... ஆனா, பாக்கி சில்லறை மட்டும் கேட்காத!
சென்னை: எங்க வேணும்னாலும் ஏறிக்கோ.. எந்த டிக்கெட் வேணும்னாலும் எடுத்துக்கோ.. ஆனா பாக்கி சில்லறை மட்டும் கேக்கவே கேக்காதே....' இது தான் பெரும்பாலான பஸ் கண்டக்டர்களின் எழுதப்படாத சட்டமாக உள்ளது.
சென்னையில் பஸ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அனேகமாக இந்த அனுபவம் நிறையவே கிடைத்திருக்கும். இதனை அனுபவம் என்று சொல்வதை விட அநியாயம் என்று சொன்னால் சரியாக இருக்கும்.காரணம் வேறு ஒன்றும் இல்லை. காலம் காலமாக இருக்கும் சில்லறைத் தட்டுப்பாடுதான். ஆனால் இப்போது சற்று வித்தியாசமாக மாறி இருக்கிறது.
முன்பெல்லாம், சில்லறை இல்லையென்றால் முணகிக் கொண்டே அப்புறம் வாங்கிக்கோ என அலட்சியமாகச் சொல்லி விட்டுப் போவார்கள். இதற்காக பேருந்தின் ஜன்னலோர சீட் கிடைத்தால் கூட நிம்மதியாக தூங்க முடியாமல் சில்லறை பாக்கியையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், இப்போதோ நிலைமை வேறு விதமாக மாறியிருக்கிறது.
மலை முழுங்கி மகாதேவன்கள்....
முன்பு, 25 பைசா, 50 பைசா சில்லறைக்குத்தான் கண்டக்டர்களிடம் கேட்டுத் தொங்க வேண்டியிருக்கும். ஆனால் மரபியல் வளர்ச்சி என்று சொல்வார்களே அதுபோல... இப்போது அதையும் தாண்டி ஒரு ரூபாயையும் முழுங்க ஆரம்பித்து விட்டார்கள் சில கண்டக்டர்கள்.
போகலாம்...ரைட்
எந்த டிக்கெட் எடுத்தாலும் ஒரு ரூபாய், சில நேரங்களில் இரண்டு ரூபாய் சில்லறை கூட இல்லை என்று படு கூலாக சொல்லி விட்டு அவர்கள் பாட்டுக்கு விசிலடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
விதவிதமா சோப்பு, சீப்புக், கண்ணாடி....
முன்பு போல இப்போது சென்னையில் சாதாரண பஸ்கள் அதிகம் கிடையாது. மாறாக எல்லோ போர்டு, எக்ஸ்பிரஸ், விரைவுப் பேருந்து, ஏசி பேருந்து என்று விதம் விதமாக கலர் கலராக பஸ் ஓட்டுகிறார்கள்.
காசு, பணம், துட்டு....
இது போதாதென்று ஸ்மால் பஸ் என்ற மினி பஸ்ஸும் நகரை வலம் வந்து கொண்டிருக்கிறது. எல்லா பஸ்களிலும் நாம் நீக்கமற பார்க்க முடிவது ஒன்றுதான்.. அதுதான் சில்லறைத் தட்டுப்பாடு.
கோபக்கார கண்டக்டர்கள்....
5 ரூபாய் டிக்கெட்டுக்கு 500 ரூபாய் நோட்டை நீட்டினால் கண்டக்டர்கள் என்ன யாராக இருந்தாலும் அடிக்கத்தான் வருவார்கள். அதுவே 5 ரூபாய்த் தாள் அல்லது நாணயத்தைக் கொடுத்தாலும் இப்போது கண்டக்டர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்.
என்னா ஒரு மொறைப்பு....
5 ரூபாயைக் கொடுத்து நான்கு ரூபாய் டிக்கெட் கேட்டால், டிக்கெட் மட்டும்தான் வருகிறது.. மிச்சம் ஒத்த ரூபாயைப் பற்றிப் பேசுவதே இல்லை. மாறாக அடுத்த பயணியிடம் திரும்ப ஆரம்பித்து விடுகிறார்கள். சாரே, சொச்ச ரூபாயை யார் தருவாங்க என்று கேட்டால், ஏதோ வண்டலூர் ஜூவில் கட்டிப் போடப்பட்டிருக்கும் காண்டா மிருகத்தைப் பார்ப்பது போலவே பார்க்கிறார்கள்.
அழுத பிள்ளைக்கே பால்....
அதுவே அந்த பயணி சற்று டென்ஷனாகி சவுண்டு விட்டால் பையைத் தேடிப் பார்த்து ரொம்ப நேரம் கழித்து மனசே இல்லாமல் மிச்ச ரூபாயைக் கொடுக்கிறார்கள். அதுவே அப்பாவி பயணியாக இருந்து விட்டால் போதும் ஒரு ரூபாயெல்லாம் எங்கப்பா கிடைக்கும், அதைப் போய் கேக்க வந்துட்டியே என்று அவர்கள் சவுண்டு கொடுத்து விடுகிறார்கள்.. கடைசி வரை தராமலும் தப்பி விடுகிறார்கள்.
கழுகுக்கண்கள்....
பல நேரங்களில் ஒரு ரூபாய் மட்டுமல்லாமல் 2 ரூபாய் சில்லறையையும் கூட கொடுப்பதில்லையாம். கேட்டால், என்னிடம் சில்லறையே கிடையாது. எல்லாமே 5 ரூபாய் நாணயங்கள்தான் என்று பையையும் நம் முன் காட்டுகிறார்கள். ஆனால் அதில் சில இரண்டு ரூபாய் நாணயங்கள் மின்னியதை நமது கழுகுக் கண்களுக்குத் தெரிந்தாலும் நாம் அமைதியாகவே இருக்க வேண்டியுள்ளது.
நாமெல்லாம் பேஸிக்காவே அப்பாவி....
ஒருவேளை இப்படி மக்களிடம் சேர்க்கப்படாமல் சேரும் சில்லறைகளை அரசிடமே பத்திரமாக ஒப்படைத்து விடுவார்களோ.. இப்படித்தான் நாம் அப்பாவித்தனமாக யோசித்தபடி இடத்தைக் காலி செய்ய வேண்டியுள்ளது.
நீங்க ரொம்ப நல்லவரு பாஸ்....
பேருந்துகளில் தான் இப்படி என்றால், மருந்துக்கடை, துணிக்கடை, பலசரக்குக் கடைக்காரர்கள் ரவுசு வேற மாதிரியாக உள்ளது. இவர்கள் கொஞ்சம் நல்லவர்கள். அதாவது சில்லறையை சாக்லெட்டாக தருவார்கள்.
என்ன உலகம்டா....
அதிலும், சில சமயங்களில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வாங்குபவர்கள், மீதிச் சில்லறையாக சாக்லேட் வாங்கிச் செல்வதைப் பார்க்கும் போது நமக்கு மயக்கமே வந்து விடும்.