நங்கநல்லூர் தபால் பெட்டியில் கிடந்த 50 பாஸ்போர்ட்கள்? - சிபிஐ தீவிர விசாரணை
சென்னை: சென்னை நங்கநல்லுார் தபால் நிலைய பெட்டியில் 50 பாஸ்போர்ட்கள் வந்தது எப்படி? அதை கொண்டு வந்து போட்டவர்கள் யார் என்பதை கண்டறிவதில் மர்மம் நீடிக்கிறது. பாஸ்போர்ட் கண்டெடுக்கப்பட்ட விவாகரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நங்கநல்லுார் தபால் நிலைய பெட்டியில் கடந்த 2ம் தேதி, 23 பாஸ்போர்ட்கள் கிடந்தன. அவற்றை, சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். மீண்டும் கடந்த 6ம் தேதி, அதே பெட்டியில் 15 பாஸ்போர்ட்டுகள் கிடந்துள்ளன.
நேற்று முன்தினம் புதன்கிழமையன்று 13 பாஸ்போர்ட் என இதுவரை மொத்தம் 50 பாஸ்போர்ட்கள், கண்டெடுக்கப்பட்டுள்ளன. தபால் நிலைய அதிகாரி, அமிர்தலிங்கம் புகாரின்பேரில், பழவந்தாங்கல் போலீசார், பாஸ்போர்ட்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், முதலில் கைப்பற்றிய, 23 பாஸ்போர்ட்கள் யாருடைவை என்று தெரியவந்தது. ஒரு பாஸ்போர்ட், அமெரிக்காவில் உள்ள ஒரு சிறுமியுடையது என்பது தெரியவந்தது. மற்றவை, மகாராஷ்ரா, தஞ்சாவூர், மதுரை, திருச்சி மற்றும் சென்னை முகவரிகளைக் கொண்டுள்ளன.
இந்த பாஸ்போர்ட் பற்றி 10 பேரிடம் விசாரித்தபோது, சென்னை, விமான நிலையத்தில் தொலைந்து போனதாக தெரிவித்தனர். ஆனால், பைக், ஜெராக்ஸ் கடை, பேருந்தில் தவற விட்டதாக, காவல் நிலையங்களில் மனு கொடுத்து, 'கண்டுபிடிக்க முடியவில்லை' என்று சான்று (என்.டி.சி.,) வாங்கி, புது பாஸ்போர்ட் வாங்கியுள்ளனர். இதனால், இவை அனைத்தும் பயன்படுத்த முடியாத பாஸ்போர்ட்களாகி விட்டன.
குடியுரிமை அதிகாரிகள் சோதனைக்குபின், அதே வளாகத்தில் பாஸ்போர்ட்களை தவற விட்டிருக்கலாம். பொதுமக்கள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள், அந்த பாஸ்போர்ட்டை எடுத்து அங்குள்ள பாதுகாவலர் அல்லது விமான நிலைய அதிகாரிகளிடம் கொடுத்திருக்கலாம்.
அவர்கள், விமான நிலைய காவல் நிலையம் அல்லது பாஸ்போர்ட் அலுவலகம் ஏதாவது ஒன்றில் ஒப்படைத்திருக்க வேண்டும். அதுபோன்ற நடவடிக்கைகள், பணிச்சுமையை கொடுக்கும் என்பதால், வாங்கி சேர்த்து வைத்திருக்க வாய்ப்புள்ளது. அவற்றை எடுத்து, யாராவது, விமான நிலையத்தில் இருந்து, 2 கிலோமீட்டர் துாரமுள்ள, நங்கநல்லுார் தபால் நிலைய பெட்டியில் போட்டிருக்கலாம் என்றும் போலீசார் கருதி வந்தனர்.
விமான நிலைய, கால் டாக்சி ஓட்டுனர்கள், அங்குள்ள நிறுவனங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பாஸ்போர்ட் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பற்றி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஸ்போர்ட் வழங்குவது மத்திய அரசு விவகாரம் என்பதால் சிபிஐ அதிகாரிகள் நங்கநல்லூர் தபால் நிலைய ஊழியர்களிடமும், விமான நிலையங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பகுதியில் சிசிடிவி கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை என்பதால் பாஸ்போர்ட்களை யார் கொண்டு வந்து தபால் பெட்டியில் போட்டார்கள் என்பதை கண்டறிவதில் சிக்கல் எழுந்துள்ளது.