குற்றாலத்திலிருந்து “குடியிருப்பு”க்கு மாறிய டாஸ்மாக்.. மக்கள் மறியல்!
தென்காசி: குற்றாலத்தில் அமைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக் கடையை, உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து குடியிருப்பு என்ற பகுதிக்கு மாவட்ட நிர்வாகம் இடமாற்றம் செய்தது. ஆனால் இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் குதித்தனர்.
குற்றாலத்தில் அமைக்கப்பட்டிருந்த அரசு மதுபானக் கடையை 48 மணி நேரத்தில் மாற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த சிலதினங்களுக்கு முன் குற்றாலம் பாதுகாப்பு குறித்த தொடரப்பட்ட பொதுநல வழக்கில் 37 விதிமுறைகளை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து குற்றாலத்தில் செயல்பட்டு வந்த அரசு மதுப்பனக் கடையை குற்றாலம் அருகேயுள்ள குடியிருப்பு என்ற ஊரில் நேற்று அவசரம் அவசரமாக மாவட்ட நிர்வாகம் கடையை மாற்றியது.
இதற்கு அப்பகுதி பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் தரப்பில் தகுந்த பதில் இல்லாததால் இன்று காலை இந்தக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள் கடைக்குமுன் அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டுள்ளனர். ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரப்பரப்பான சூழல் நிலவி வருகிறது.