லஞ்சம் வாங்குபவர்களை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பாராட்டு விழா: போட்டுத் தாக்கிய கலெக்டர்!
லஞ்சம் வாங்குபவர்களை பிடித்துக்கொடுத்தால் நானே பாராட்ட விழா நடத்துவேன் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் லஞ்சம் வாங்குபவர்களை பிடித்துக்கொடுத்தால் நானே பாராட்ட விழா நடத்துவேன் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கிராமங்களில் தங்கி பணி செய்ய சொல்கிறேன். பலரும் கேட்கவில்லை, திருந்தவில்லை என்றும் ஆட்சியர் சுப்பிரமணியன் சாடினார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஒரு பக்கம் அரசு அதிகாரிகள் ஊழியர்களும், எதிரில் விவசாயிகளும் அவர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை எடுத்து கூறினார்கள்.
கிராம அலுவலர்கள் உட்பட வருவாய்துறையில் ஏகப்பட்ட லஞ்சம் வாங்கப்படுகிறது. எந்த அதிகாரியும் அந்தந்த கிராமங்களில் தங்குவதில்லை. கடும் வறட்சியில் வாடிப்போயுள்ள நாங்கள் எந்த சலுகைக்காக சான்றுக்காக போனாலும் பணம் இல்லாமல் செய்வதில்லை என்று அய்யாசாமி என்ற விவசாயி சொன்னவுடன், இதேபோல் பல விவசாயிகளும் குற்றம் சாட்டி பேசினார்கள்.
அப்போது ஆட்சியர் சுப்பிரமணியன், பலமுறை அலுவலக மீட்டிங்கிளும் சர்க்குலர் மூலமாக சொல்லியுள்ளேன் மக்களிடம் லஞ்சம் வாங்கக் கூடாது என்று. அதேபோல் சம்மந்தப்பட்ட கிராமங்களில் தங்கி பணி செய்ய சொல்கிறேன். பலரும் கேட்கவில்லை. திருந்தவில்லை எனவே அப்படிப்பட்டவர்களை லஞ்ச ஒழிப்பு போலீஸ் மூலம் லஞ்சம் கொடுக்கும்போது கைது செய்யுங்கள்.
அப்படி செய்யும் விவசாயிகளுக்கு, பொதுமக்களுக்கு நானே பாராட்டு விழா நடத்துகிறேன் என்று போட்டுதாக்க, அரசு அதிகாரிகள், ஊழியர்கள் முகத்தில் அசடு வழிந்தது. கூட்டத்தில் விவசாயிகள் மத்தியில் பலத்த கைதட்டல் எழுந்தது.