அடிக்கடி ஸ்டிரைக் செய்யும் வங்கி ஊழியர்கள்: எரிச்சலில் மக்கள்
சென்னை: இந்தியா முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வெளியிட்டுள்ள வேலைநிறுத்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுவை உள்ளிட்ட 6 மாநிலங்களில் 23 ஆயிரம் வங்கிக் கிளைகளில் சுமார் ஒன்றரை லட்சம் வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் மட்டும் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 9 வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் கடந்த மாதம் 12 ஆம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மும்பையில் தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் வங்கி ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதில் உடன்பாடு ஏற்பட்டால், செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கும் வேலை நிறத்தம் வாபஸ் பெறப்படும் என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அடிக்கடி வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபடுவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தனியார் நிறுவனங்கள் ஊதியம் அளிக்கும் நாளிலேயே வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்திருப்பது பல லட்சம் பேரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.