புதுவையில் மக்கள் ஆவேசம்.. 3 மதுபானக் கடைகளுக்கு தீவைத்து எரித்தனர்!
புதுச்சேரியில் உள்ள 3 மதுபானக் கடைகளுக்கு தீவைத்து கொளுத்தி மக்கள் தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள சோரியங்குப்பம் கிராமத்தில் உள்ள 3 மதுபானக் கடைகளுக்கு மக்கள் தீவைத்து கொளுத்தினர்.
நாடு முழுவதும் மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது மதுக்கடைகள். பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு இதுதான் முதன்மை காரணமாக கூறப்படுகிறது. பெரும்பாலான விபத்துகளுக்கும், அதில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் இந்த மதுதான் காரணம் என்று கருதிய உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்தது.
அதாவது தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டருக்குள் அமைக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்பதுதான் தீர்ப்பாகும். இதை அடுத்து தமிழகத்தில் 3,500 மதுபானக் கடைகள் மூடப்பட்டன. எனினும் ஊருக்குள் கடையை விரிக்க ஊழியர்கள் முயற்சித்தும், பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதையும் மீறி அமைத்தாலும், பொதுமக்களே கடையை உடைத்து நொறுக்கி் வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மதுபானக் கடைகளுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
புதுச்சேரி- கடலூர் சாலையில் சோரியங்குப்பம் கிராமத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளை அகற்ற வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது மதுபானக் கடைகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் 3 மதுக்கடைக்கு தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.