தமிழக அரசியலில் மக்கள் நல கூட்டணி புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்: வைகோ நம்பிக்கை
நெல்லை: தமிழக அரசியல் களத்தில் மக்கள் நலக் கூட்டணி மாற்று சக்தியாகத் திகழ்ந்து ஆட்சி அமைக்கும் என, மதிமுக பொதுச்செயலர் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.
நெல்லை சரஸ்வதி விடுதியில் கணினி வசதியுடன் புதுப்பிக்கப்பட்ட கட்சியின் திருநெல்வேலி புறநகர் மாவட்ட அலுவலகத் திறப்பு விழாவில் வைகோ நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில்:
தமிழக அரசியல் வரலாற்றில் திமுக, அதிமுக அல்லாத ஒரு மாற்று அரசு அமைய வேண்டும் என பொதுமக்கள், நடுநிலையாளர்கள் விரும்புகின்றனர். சமூக வலைதளங்களில் இளைஞர்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்கின்றனர்.

மக்கள் நலக் கூட்டணி மாற்று சக்தியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. திமுக, அதிமுகவுக்கு இல்லாத மகத்தான சக்தி இக்கூட்டணிக்கு உள்ளது. அதுதான் மக்கள் எனும் பிரமாஸ்திரம்.
தமிழகத்தின் புதிய விடியலை நோக்கி மதிமுக சென்று கொண்டிருக்கிறது. தொண்டர்களின் உழைப்பு, தியாகத்தால் மதிமுக எழுச்சி பெற்றுள்ளது. மக்கள் நலக் கூட்டணி சார்பில் டிச. 31-இல் சென்னையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஜன. 22, 23, 24 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நானும், தொல். திருமாவளவன், இரா. முத்தரசன், ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோரும் பிரசாரம் செய்கிறோம். ஜன. 27ல் மதுரையில் நடைபெறும் மாநாட்டில் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய தலைவர்கள் பங்கேற்கின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications