பட்டாசு வெடித்ததால் கோபம்...திருவண்ணாமலை பொதுக்கூட்டத்தில் பேசாமல் சென்ற வைகோ!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் தொடர்ச்சியாக பட்டாசு வெடித்ததால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோபத்துடன் பேசாமல் வெளியேறினார்.
மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தமிழகம் முழுவதும் ‘மாற்று அரசியல் எழுச்சி பிரச்சாரப் பயணம்' என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது 3 வது கட்ட பிரச்சாரத்தை மார்ச் 1 ஆம் தேதி துவக்கினர்.
அதன் ஒருபகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அரசியல் மாற்று எழுச்சி பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பேசினார்கள்.
இதையடுத்து கடைசியாக வைகோ உரையாற்ற வந்தார். அப்போது, தொண்டர்கள் உற்சாக மிகுதியால் பட்டாசு வெடித்தனர். இதனால் வைகோவால் பேச முடியவில்லை. உடனே அவர், தொண்டர்களை பட்டாசு வெடிப்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
ஆனால் அவரின் பேச்சை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பட்டாசு வெடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த வைகோ கூட்டத்தில் பேசாமல் மேடையை விட்டு கீழே இறங்கி தனது வாகனத்தில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் அவரின் பேச்சை கேட்பதற்காக கூடியிருந்து தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.