3 தொகுதி இடைத்தேர்தலில் ம.ந.கூட்டணி போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்போம்: ஜி.ராமகிருஷ்ணன்
நெல்லை: தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்போம் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் முடிவை அடுத்து தேமுதிக, தமாகா, தமிழர் முன்னேற்ற படை உள்ளிட்ட கட்சிகள் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறியது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் மட்டுமே தற்போது மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணி நடக்கவுள்ள 3 இடைத்தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நெல்லையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
நவம்பர் 12, 13, 14 ஆகிய தேதிகளில் நெல்லையில் மாநில மாநாடு நடக்கிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நெல்லையில் நடைபெற உள்ளது. மத்திய அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் 'நீடு' என்ற பொது நுழைவு தேர்வை புகுத்தியுள்ளது.
இதனால் தமிழக மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே பொது நுழைவு தேர்வை அமல்படுத்துவதை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அரசின் பங்குகளை 51 சதவீதம் தனியாருக்கு வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. இப்படி வழங்கினால் அந்த பொதுத்துறை நிறுவனம் தனியார் வசம் சென்று விடும்.
தற்போது நல்ல முறையில் இயங்கி வரும் சேலம் உருக்காலையும் தனியார் மயமாக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இத்திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துவதை பரிசீலனை செய்ய வேண்டும். கூடங்குளத்தில் ஏற்கனவே 2 அணு உலைகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது 3, 4-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 5, 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. இது ஏற்புடையதல்ல.
கூடங்குளத்தில் அணுஉலை விரிவாக்க பணிகளை மத்திய அரசு கைவிட வேண்டும். ரேஷன் பொருட்கள் சப்ளையில் அனைத்து கார்டுகளுக்கும் அனைத்து பொருட்களும் வழங்கப்படுவதில்லை.தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அனைத்து பொருட்களும் வழங்க வேண்டும். வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரேஷன் அரிசி விலையை மத்திய அரசு 3 மடங்காக உயர்த்தி அறிவித்ததை ஏற்க முடியாது.
எனவே உடனே அதை குறைக்க வேண்டும். காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய அரசு கர்நாடக அரசுக்கு ஆதரவாகவும், தமிழக அரசுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதன் பிறகாவது மத்திய அரசு தனது நிலைபாட்டை மாற்ற வேண்டும்.
கர்நாடக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு காவிரி பிரச்சனையில் மத்திய அரசு அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறது. தமிழகத்தில் திருப்பரங்குன்றம் உள்பட 3 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி போட்டியிடுவது குறித்து அதில் அங்கம் வகிக்கும் 4 கட்சிகளும் ஒன்றாக ஆலோசனை நடத்தி விரைவில் முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்












Click it and Unblock the Notifications