சென்னையில் டாஸ்மாக் கடை முற்றுகை, போலீஸ் தடியடி- குமரியில் பேருந்துகள் மீது கல்வீச்சு
கன்னியாகுமரி: சென்னை கோவிலம்பாக்கத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேமுதிக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மது விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் வலுவடைந்துள்ளது. இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பல இடங்களில் மதுக்கடைகள் சூறையாடப்பட்டன. குமரி மாவட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஏராளமானோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் முற்றுகை
சென்னை கோவிலம்பாக்கத்தில் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் திறக்கப்பட்டன. அப்போது அங்கு வந்த தேமுதிக, மதிமுக கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மதுக்கடையை மூடக்கோரி முழக்கமிட்டனர். மதுக்கடையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். தொடர்ந்து போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.

போராட்டம் கைது
தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில தலைவர் செல்லபாண்டியன் தலைமையில் 3 பேர் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னை அண்ணா சாலை நந்தனம் சிக்னல் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

உண்ணாவிரதம்
சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சத்யாக்கிரக போராட்டக்காரர்கள் அமைப்பினரும் தாம்பரம் பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதம் இருந்த சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தினரும் கைது செய்யப்பட்டனர்.

கடலூரில் முற்றுகை
கடலூர் மாவட்டம் தொரவலூர் திறக்கப்பட்டிருந்த மதுக்கடையை தேமுதிக, விசிக தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து முழக்கமிட்டனர்.

தூத்துக்குடியில் அடைப்பு
இதேபோல தமிழகத்தின் பல பகுதிகளிலும் மதுவுக்கு எதிராக நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தூத்துக்குடி நகரில் 6 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன.

திருவண்ணாமலையில் முற்றுகை
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தரடாப்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி கிராமம் அருகேயுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

தேமுதிக எம்.எல்.ஏ கைது
பொள்ளாச்சியில் மது கடையை முற்றுகையிட முயன்ற தே.மு.தி.க.வினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். பேருந்து நிலையம் அருகே சூலூர் எம்.எல்.ஏ தினகரன் உள்ளிட்ட தே.மு.தி.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

பேருந்துகள் மீது கல்வீச்சு
மார்த்தாண்டம் அருகே 2 அரசுப் பேருந்துகள் மீது மர்மநபர்கள் கல்வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மர்மநபர்கள் கல்லுத்தொட்டியில் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பி சென்றனர். மார்த்தாண்டத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து மீது கல்வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் பள்ளி பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து விட்டு மர்மநபர்கள் தப்பி சென்றனர்.

ஏராளமானோர் கைது
இன்று அறிவிக்கப்பட்டுள்ள முழு கடையடைப்பு போராட்டத்தை ஒட்டி, மதிமுக., தேமுதிக., விசி., கட்சிகளைச் சேர்ந்த 97 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். முழு கடையடைப்பு போராட்ட அறிவிப்பை ஒட்டி, மேட்டூரில் விசி., நிர்வாகிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 118 பேர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications