பாப்பம்மாளுக்கு தொடரும் பிரச்சனை.. மாணவர்கள், மக்கள் போராட்டம்.. மீண்டும் சர்ச்சை!
திருப்பூர் அரசு பள்ளி சத்துணவு பணியாளார் பாப்பம்மாளுக்கு எதிராக அந்த பள்ளி மாணவர்கள், மக்கள் போராட்டத்தில் களமிறங்கி இருக்கிறார்கள்.
திருப்பூர்: திருப்பூர் அரசு பள்ளி சத்துணவு பணியாளார் பாப்பம்மாளுக்கு எதிராக அந்த பள்ளி மாணவர்கள், மக்கள் போராட்டத்தில் களமிறங்கி இருக்கிறார்கள். இது அங்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை சேர்ந்த பாப்பம்மாள் என்ற சத்துணவு பணியாளர், 12 வருடமாக சத்துணவு பணியாளராக பணியாற்றி வருகிறார். அவர் சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள திருமலை கவுண்டம்பாளைய அரசு பள்ளிக்கூடத்திற்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு பிரச்சனை ஜாதி ரீதியாக வந்துள்ளது. ஒரு தலித் சமூகத்தை சேர்ந்த பெண் எப்படி எங்க வீட்டு பிள்ளைகளுக்கு சமைக்கலாம் என்று அதே பகுதியை சேர்ந்த ஆதிக்க சாதியினர் வந்து சண்டையிட்டனர். இதையடுத்து அவர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
பெரிய பிரச்சனை
இந்த பிரச்சனை தமிழகம் முழுக்க பெரிதானது. பெரியாரிய இயக்கம், தலித்திய இயக்கம். திராவிட இயக்கம் எல்லாம் இந்த பிரச்சனைக்கு எதிராக குரல் கொடுத்தன. அழுத்தம் அதிகரிக்கவே அரசு பின்வாங்கியது. பாப்பம்மாளுக்கு மீண்டும் திருமலை கவுண்டம்பாளையம் பள்ளிக்கே பணியிட மாற்றம் வழங்கப்பட்டது.
மீண்டும் மீண்டும்
இந்த நிலையில் கடந்த வாரம் இன்னொரு பிரச்சனை வந்தது. அவர் சமைத்த உணவில் பல்லி இருக்கிறது என்று போலீசில் புகார் அளித்து இருக்கிறார் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர். மிகவும் கவனக்குறைவாக அவர் உணவு சமைக்கிறார் என்று புகார் அளித்து இருக்கிறார்கள். இதையடுத்து பாப்பம்மாள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
கைது
ஆனால் சாதுர்யமாக செயல்பட்ட பாப்பம்மாள், தான் சமைத்த பின் எடுத்து வைத்திருந்த உணவை போலீசிடம் கொடுத்து சோதிக்க சொன்னார். அதன் பின் அதில் பல்லி எதுவும் விழவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அதேபோல், தன்னை மக்கள் ஜாதி ரீதியாக அவமதிப்பதாக பாப்பம்மாள் போலீசில் புகார் அள்ளித்தார்.
பெரிய போராட்டம்
இதையடுத்து அந்த ஊரில் உள்ள சில நபர்களை போலீஸ் கைது செய்தது. இந்த நிலையில் தற்போது அந்த பள்ளியில் உள்ள மாணவர்களும், மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் சேர்ந்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். பாப்பம்மாளை கைது செய்ய வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இது அங்கு பெரிய பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.