75 நாட்கள்... எவர் கண்ணிலும் காட்டப்படாத 'அம்மா'வின் முகம்... மக்கள் கண்ணீர் கதறல்! #RIPAmma
சென்னை: கடந்த 75 நாட்களாக எவர் கண்ணிலும் காட்டப்படாமலிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முகத்தை முதல் முறையாக இன்று பார்த்த மக்கள் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வடித்தனர், கதறி அழுதனர்.
கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் போன்ற சிறு உடல் நலக் கோளாறுகளுக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்தார் முதல்வர் ஜெயலலிதா. அங்கே சேர்ந்த பிறகு ஒவ்வொரு புதிய நோயாக அவரது உடலைப் பாதித்தன.
முந்தைய நாள் மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் பங்கேற்று, பத்து நிமிடத்துக்கு மேல் உரையாற்றிய ஜெயலலிதா, அடுத்த நாளே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றிலிருந்து இன்று அதிகாலை 6.15 மணி வரை அவரது முகம், அல்லது மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவது போன்ற புகைப்படம் எதையுமே மருத்துவமனை நிர்வாகமோ, உடனிருந்த சசிகலா போன்றவர்களோ வெளியிடவில்லை. தமிழக ஆளுநர், மத்திய அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், திரைப் பிரமுகர்கள் என யாராக இருந்தாலும் சிகிச்சைப் பெறும் ஜெயலலிதாவைப் பார்க்க முடியாத நிலைதான் இருந்தது.
நேற்று இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா மரணித்துவிட்டார் என்று கூறப்பட்ட பிறகு, அவரது உடலையாவது பொதுமக்களுக்குக் காட்டுவார்கள் என விடிய விடிய காத்திருந்தனர் மக்களும் தொண்டர்களும். ஆனால் விடிந்த பிறகு, 6.15 மணிக்கே அவரது முகத்தைக் காட்டினார்கள்.
அவரது முகத்தைப் பார்த்ததுமே 'அய்யோ... அம்மா.. உங்கள இப்படியா பார்க்கணும் தாயே...' என வெடித்துக் கிளம்பியது மக்களின் அழுகைக் குரல். தலையிலும் வாயிலும் அடித்தபடி, கதறி அழுதபடி ஜெயலலிதாவுக்கு தங்களின் கடைசி மரியாதையைச் செலுத்திக் கொண்டுள்ளனர் மக்கள்.