Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலுக்கு தடை விதிக்க சென்னை ஹைகோர்ட் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நாவலுக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இது தொடர்பாக திருச்செங்கோடு மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்வதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செங்கோடு மக்கள் மன்றம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படைப்பாளிக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை உருவாக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Perumal Murugan need not withdraw his novel: Madras HC

கடந்த ஆண்டு மாதொருபாகன் நாவலில் இருந்த ஒருசில கருத்துகளுக்கு தமிழகத்தில் சில பிரிவினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து அந்த நாவலை விற்பனையில் இருந்து திரும்பப் பெறுவதாக தெரிவித்த பெருமாள் முருகன் இனிதான் ஒருபோதும் எழுதப்போவதில்லை எனவும் அறிவித்து இருந்தார்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ்செல்வன் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘நாமக்கலை சேர்ந்த பேராசிரியர் பெருமாள்முருகன், ‘மாதொரு பாகன்' என்ற நாவலை எழுதினார். அதில், இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த நாவலை திரும்ப பெறவேண்டும் என்று பெருமாள் முருகனை நிர்பந்தம் செய்து சம்மதிக்க வைத்துள்ளனர். எனவே இந்த அமைதி பேச்சு வார்த்தையை செல்லாது என்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

அதேபோல, மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் செயலாளர் பாலமுருகன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நாமக்கலில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றும் பெருமாள்முருகன், உதவி பேராசிரியராக பணியாற்றும் அவரது மனைவி எழிலரசி ஆகியோருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, அவர்கள் இருவரையும் சென்னையில் உள்ள அரசு கல்லூரிக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதேபோல, பெண்களை அவதூறாக சித்தரிக்கும் கருத்துக்களை நாவலில் எழுதிய பெருமாள்முருகன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடவேண்டும் என்று பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், புஷ்பா சத்தியநாராயணா அமர்வு, மாதொரு பாகன் நாவலுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற திருச்செங்கோடு மக்கள் மன்றத்தின் கோரிக்கையை நிராகரித்தனர்.

பிரச்னை தொடர்பாக, பெருமாள் முருகனிடம் நாமக்கல் மாவட்ட நிர்வாகக் குழு, மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியது தவறு என குறிப்பிட்ட நீதிபதிகள், மாவட்ட நிர்வாகக் குழு எடுத்த முடிவு, எந்த எழுத்தாளரையும், பதிப்பாளரையும் கட்டுப்படுத்தாது என தெரிவித்தனர்.

மாதொரு பாகன் நாவலின் புத்தகங்களை பெருமாள் முருகன் திரும்பப்பெற வேண்டிய அவசியமில்லை என கூறிய நீதிபதிகள், அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரக் கோரிய மனுவையும் ரத்துசெய்வதாக அறிவித்தனர். படைப்பாளிகளுக்கு எதிரான போராட்டத்தின்போது கடைபிடிக்கப்படவேண்டிய நெறிமுறைகளை வகுத்திருப்பதாகவும் அவற்றை பின்பற்றுவது பற்றி 3 மாதங்களுக்குள் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

பெருமாள் முருகன் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்கிறோம். நாவல் ஆசிரியர், பேராசிரியர் பெருமாள் முருகன், அவரது மனைவி உதவி பேராசிரியர் எழிலரசி ஆகியோருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், அவர்களை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்கிறோம்.

இவர்கள் இருவரையும், சென்னையில் உள்ள அரசு கல்லூரிக்கு தமிழக அரசு ஏற்கனவே மாற்றி விட்டது என்பதால், அந்த வழக்கில் மேற்கொண்டு உத்தரவு எதுவும் பிறப்பிக்க தேவையில்லை என்று நாங்கள் கருதுகிறோம் என்று கூறியுள்ளனர்.

மேலும் அந்த தீர்ப்பில், மாதொருபாகன் நாவல் தொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்கிறோம்.

இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்கள் புத்தகங்களில் இடம் பெறும்போது, அது குறித்து விசாரித்து தகுந்த முடிவினை எடுக்க தமிழக அரசு அறிஞர்களை கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும். இதன் மூலம், இதுபோன்ற பிரச்சனைகளுக்கு ஐகோர்ட்டுக்கு வருவதை தடுக்க முடியும். எனவே, இந்து தொடர்பான மனுவை ஏற்றுக்கொண்டு, அதை பைசல் செய்கிறோம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மாதொரு பாகன் நாவலுக்கு கடந்த ஆண்டு ‘சமன்வாய் பாஷா சம்மன்' என்னும் உயரிய விருது வழங்கப்பட்டது. 49 வயது பெருமாள் முருகன் இதுவரை 9 நாவல்களையும், தலா 4 தொகுதிகளைக் கொண்ட சிறுகதைகள், கவிதைகளையும் எழுதி இருக்கிறார். இவருடைய மாதொருபாகன்(ஒன் பார்ட் உமன்) உள்ளிட்ட 3 நாவல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+