டெல்லி போலீசின் அடுத்த ஸ்பாட் விசாரணை கொளப்பாக்கம்... செல்போன் நிறுவன மேலாளருக்கு சம்மன்!
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் தர முயன்ற விவகரத்தில் சென்னையை சேர்ந்த தனியார் செல்போன் நிறுவன மேலாளருக்கு டெல்லி போலீஸ் சம்மன் அளித்துள்ளது.
சென்னை : இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரனிடம் டெல்லி போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் டெல்லி போலீசார் சென்னை கொளப்பாக்கத்தை சேர்ந்த தனியார் செல்போன் நிறுவன மேலாளருக்கு டெல்லி போலீஸ் சம்மன் அளித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக அம்மா அணியை சேர்ந்த துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார்.
தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் யார்யார் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்று டெல்லி போலீஸ் நடத்தி வரும் விசாரணைப் பட்டியல் அனுமார் வால் போல நீண்டு கொண்டே வருகிறது.
இன்று காலையில் சென்னை ஆதம்பாக்கத்தில் மன்னார்குடியை சேர்ந்த முன்னாள் பொதுப்பணித்துறை அதிகாரி மோகன் என்பவரைத் தேடிச் சென்று அவரது வீட்டில் விசாரணை நடத்தியது.
விசாரணை முடிந்த கையோடு வந்த வேலையில் தீயாக வேலை செய்து வரும் டெல்லி போலீஸ், அடுத்ததாக போரூரையடுத்த கொளப்பாக்கம் வினோத் கார்டன் பகுதிக்கு சென்றது.
கொளப்பாக்கத்தில் டெல்லி போலீஸ் தேடிச் சென்றது அங்கு தனியார் செல்போன் நிறுவன மேலாளர் பிலிப்ஸ்டேனியல் என்று கூறப்படுகிறது. வீட்டில் பிலிப் டேனியல் இல்லாததால் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி போலீசார் சம்மனை அளித்து விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்