வெள்ளியங்கிரியில் தொடரும் சோகம்.. மலை ஏறிய பக்தர் பலி! இந்த ஆண்டு மட்டுமே 9 பேர் உயிரிழப்பு.. உஷார்!
கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறிய திருவள்ளூரைச் சேர்ந்த நபர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் வெள்ளியங்கிரி மலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
கோவை மாவட்டம் பூண்டியில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் "தென் கயிலாயம்" என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. 7-வது மலை உச்சியில் சுயம்பு லிங்கமாக காட்சி தரும் வெள்ளியங்கிரி ஆண்டவரை, ஆண்டுதோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் மலை ஏறி தரிசனம் செய்து வருகின்றனர்.

பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 7 மலைகளை கொண்ட வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் குழுவாகச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். முழு உடல் பரிசோதனை செய்து மலை ஏற வேண்டும். 6-வது மலையில் வனத்துறை சார்பில் தற்காலிக முகாம் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. டிரோன் மூலமும் கண்காணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 28) மதியம் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கிராமத்தை சேர்ந்த புண்ணியகோடி (46) என்பவருடன் அவர்களது நண்பர்கள் 10 பேர் அடிவாரத்தில் தரிசனம் முடித்து மலை ஏறத் தொடங்கினர். முதல் மலை ஏறும் போது திடீரென புண்ணியகோடிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, வாந்தி எடுத்துள்ளார்.
உடனே, அவரது நண்பர்கள் புண்ணியகோடியை கீழே அடிவாரத்திற்கு அழைத்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலந்துறை பகுதியில் உள்ள பூலுவபட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு புண்ணியகோடியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆலந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளனர். மேலும், இந்தாண்டு வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்கள் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதத்தில் வெள்ளியங்கிரி மலை ஏறிய ஹதாரபாத்தை சேர்ந்த சுப்பாராவ் (68), சேலத்தை சேர்ந்த தியாகராஜன் (35), தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் (46) ஆகிய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மார்ச் 30ஆம் தேதி சென்னையை சேர்ந்த ரகுராமன் (60) ஐந்தாவது மலை ஏறும்போது உடல் நல பாதிப்பினால் உயிரிழந்தார்.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்ற 47 வயதான நபர், மலையேறும் போது உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து திருப்பூர் எஸ்.வி. காலணி பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் என்ற 31 வயதான நபர், சாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கும் போது உயிரிழந்தார். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த புண்ணியகோடி (46) நேற்று உயிரிழந்துள்ளார்.
ஆண்டுதோறும் வெள்ளியங்கிரி மலை ஏறுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில் மூச்சு திணறல், இருதய பாதிப்பு, உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய் போன்ற உடல் நலக்குறைவு உள்ளவர்கள் மலையேற கூடாது என வனத்துறையினர் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications