ஆங்கிலப் புத்தாண்டின்போது நள்ளிரவில் கோயில்களை திறக்கக் கூடாது... ஹைகோர்ட்டில் அவசர வழக்கு!
ஆங்கில புத்தாண்டின் போது நள்ளிரவில் கோயில்களைத் திறக்க தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை : ஆங்கில புத்தாண்டின் போது டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவில் இந்து கோயில்களை திறக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், அண்மைக் காலமாக ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி இரவு கோவில்களின் நடை சாத்தப்படாமல் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக மாறி வருகிறது.

ஆகம விதிப்படி இரவு 9 மணிக்குள் பூஜையை முடித்து இந்துக் கோயில்களின் நடையை சாத்திவிட வேண்டும். அதன் பிறகு காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் நடையை திறக்க வேண்டும்.
இரவு நேரத்தில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும் என்பதால் மூதாதையர்கள் இந்த நடைமுறையை வகுத்துள்ளனர். கோவில்களை இரவில் திறந்து வைக்கக் கூடாது என ஆந்திர மாநில அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளதை மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சைவக் கோயில்கள் சிவராத்திரி நாளிலும், வைணவக் கோயில்கள் வைகுண்ட ஏகாதசி நாளிலும் இரவு திறந்து வைக்க ஆகம விதி உள்ளது. இந்த விதிகளை மீறி புத்தாண்டை ஒட்டிக் கோயில்கள் நள்ளிரவில் திறந்து வைக்கப்படுகின்றன.
இந்த புதிய நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அஸ்வத்தாமன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு நாளை விடுமுறை கால நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications