அடி அடின்னு அடிப்பார் எங்க வாத்தியார்.. தூக்கில் தொங்கிய அருண் பிரசாத்!
பிளஸ் 1 மாணவன் தன் தற்கொலைக்கு காரணம் ஆசிரியர்கள்தான் என கடிதம் எழுதியுள்ளான்.
வேலூர்: "எங்க வாத்தியார் பாடமே நடத்துறது இல்ல... பாடம் நடத்தாம எப்பவுமே கேள்வி கேட்பார்.. எங்களுக்கு பதில் தெரியாது. அதனால எங்கள போட்டு அடிஅடின்னு அடிப்பார்" இப்படி எழுதிவிட்டு தூக்கு போட்டு உயிரிழந்துள்ளான் பிளஸ் 1 படிக்கும் மாணவன் ஒருவன்!!
பொய்மை கிராமத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த மாணவர் அருண்பிரசாத். இவர் கடந்த 3-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது, ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டிற்கு வந்த பெற்றோர், அருண்பிரசாத்தை பார்த்து கதறி துடித்து அழுதனர். இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்தாலும், எதற்காக தங்கள் மகன் தூக்கு போட்டுக் கொண்டான் என தெரியாமல் 4 நாட்களாக தவித்து போய்விட்டனர்.
வாத்தியார்களே காரணம்
இந்நிலையில், அருண்பிரசாத்தின் ஸ்கூலுக்கு கொண்டு போகும் பையை எடுத்து பார்த்தனர். அதில் ஒரு புத்தகத்தில் ஒரு கடிதம் இருப்பதை கண்டனர். அந்த கடிதத்தில், "ஆசிரியர்கள் யாரும் பாடம் நடத்துவதில்லை. எப்பவுமே கேள்வி கேட்டு அடித்தார்கள். முக்கியமாக, தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், ஆசிரியர்கள் கண்ணப்பன், குமார், உடற்கல்வி ஆசிரியர்கள்தான். இவர்கள்தான் என் தற்கொலைக்கு காரணம்" என்று பகிரங்கமாக பெயர்களை தெரிவித்திருந்தார்.
கணக்கு வாத்தியார்
இதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்து உறவினர்களை எல்லாம் திரட்டிக் கொண்டு இன்று காலை பள்ளிக்கு சென்றனர். ஆனால் அங்கு தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் இல்லை. அதனால் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த கணக்கு வாத்தியார்தான் இருந்தார். அவரை பிடித்து அனைவரும் சரமாரியாக தாக்கினார்கள். மீதமிருந்த ஆசிரியர்கள் எல்லாம் கும்பலாக ஆட்கள் வருவதை பார்த்ததும் தப்பி ஓடிபோய் மறைந்து கொண்டனர்.
திரண்டு போராட்டம்
ஏற்கனவே அருண்பிரசாத் உயிரிழந்ததிலிருந்து அந்த பள்ளி மாணவர்கள் மனமுடைந்து போய் இருந்தனர். இப்படி எல்லா வாத்தியார்களும் சேர்ந்து நல்லா படிக்கிற அருண்பிரசாத்தை சாகடிச்சிட்டாங்களே என்ற ஆத்திரத்திலும் மாணவர்கள் இருந்தனர். இந்நிலையில் பள்ளிக்குள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தவும், எல்லா மாணவர்களும் வகுப்புக்களை விட்டு வெளியே ஓடிவந்தனர். எல்லோரும் ஒன்றுசேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் வந்தனர்
அமைதியான சூழலில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தநிலையில், இப்படி போராட்டம், தாக்குதல் என்று வந்துவிட்டதால், அந்த இடமே அமர்க்களமாக இருந்தது. எங்கு திரும்பினாலும் போராட்டக்களம்போல் காணப்பட்டது. இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் நிலைமையை கொஞ்சம் கொஞ்சமாக சீர்செய்தார்கள்.
விசாரணை
படுகாயமடைந்த கணக்கு வாத்தியார் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் கல்வி மாவட்ட அலுவலகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர் புலேந்திரன் விசாரணை செய்து வருகிறார்.