அன்புமணி பாமகவின் முதல்வர் வேட்பாளர், 2016 தேர்தலில் புதிய அணி... பாஜக கூட்டணி உடைந்தது
சேலம்: 2016 சட்டசபைத் தேர்தலில் பாமக தலைமையில் புதிய அணை அமைப்போம் என்று பாமக அறி்வித்துள்ளது. மேலும் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராகவும் அது அறிவித்துள்ளது.
இதன் மூலம் வரும் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அது இடம் பெறாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் பாமகவின் அறிவிப்பால் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பெரும் விரிசல் உண்டாகும் என்றும் தெரிகிறது.
சேலத்தில் நேற்று பாமக பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில்தான் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாலையில் நடந்த பொதுக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,
சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21-ந் தேதி நடைபெற்ற பா.ம.க. தலைமை சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டி மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்துவதை காலம் இட்ட கட்டளையாக பா.ம.க. கருதுகிறது. இதற்காக மக்கள் நலனிலும், தமிழகத்தின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய அணி ஒன்றை உருவாக்க பா.ம.க. தீர்மானித்து இருக்கிறது.
தமிழகத்தை இரு திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து மீட்டு, வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதில் அக்கறை கொண்ட கட்சிகள் அனைத்தும் பா.ம.க. தலைமையிலான இந்த மாற்று அணியில் இணைந்து பணியாற்ற வரும்படி இந்த பொதுக்குழு கூட்டம் அழைப்பு விடுக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி 2016-ம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் பா.ம.க. கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக கட்சியின் இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியும், தர்மபுரி தொகுதி எம்.பி.யுமான டாக்டர் அன்புமணியை முன்நிறுத்துவது என்பதை இந்த மாநாட்டின் மூலம் அறிவிக்கிறோம். இந்த மாநாட்டு தீர்மானங்கள் குறித்து பின்னர் விரிவாக பேசுகிறேன் என்றார்.
இதையடுத்து கட்சித் தலைவர் ஜி.கே.மணி சிறப்புத் தீர்மானத்தை வாசித்தார். அதில், தமிழ்நாட்டை திட்டமிட்டு சீரழிக்கும் இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்ட பா.ம.க. கட்சி தலைமையில் மாற்று அணி அமைத்து, அந்த அணியின் முதல்வர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் பேசினார். அவர் பேசுகையில், பாமக. சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ள இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த உங்களுக்கும், கட்சியின் நிறுவன தலைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த வாய்ப்பை பணிவுடன் உங்களை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்.
கடந்த காலங்களில் பல்வேறு பொறுப்புகளை எனக்கு கட்சி தலைவர் கொடுத்திருந்தார். எனக்கு பதவி ஆசை கிடையாது. எனக்கு மிகவும் பிடித்த பொறுப்பு உங்களுடன் தோள்கொடுத்து தம்பியாகவும், தொண்டராகவும் இருப்பது தான். இந்த பதவியை தான் மிக உயர்ந்த பதவியாக கருதுகிறேன். தமிழ்நாட்டின் நலனிலும், தமிழக மக்களின் நலனிலும் அக்கறை கொண்டு பா.ம.க. பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
அதற்கு பலனாக 2016-ம் ஆண்டு பா.ம.க. ஆட்சியை பிடிக்கும். டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி ஆரம்பித்த ஒரு ஆண்டு காலத்தில் முதல்-அமைச்சராக கெஜ்ரிவால் பதவி ஏற்று சாதனை படைத்துள்ளார். அவருடைய வெற்றி குறித்து சமூக வலைத்தளத்தில் டெல்லியில் ஆம் ஆத்மி சுனாமி வந்தது போல், 2016-ல் பா.ம.க. சுனாமி வீசும் என்று பதிவு செய்திருந்தேன். அவர் டெல்லியில் ஒவ்வொரு வீடு, வீடாகவும், வீதி, வீதியாகவும் வாக்காளர்களை சந்தித்து இந்த பதவியை பெற முடிந்தது. அதேபோல் பா.ம.க. தொண்டர்கள் அனைவரும் இப்போது முதலே தமிழகத்தில் உள்ள ஐந்தே கால் கோடி மக்களை நேரில் சந்தித்து நமது இயக்கத்திற்கு ஆதரவு பெற வேண்டும்.












Click it and Unblock the Notifications