3 தொகுதி இடைத் தேர்தல்: பாமக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிப்பு
சென்னை: 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அரவக்குறிச்சியில் பி.எம்.கே.பாஸ்கரன் போட்டியிடுகிறார். தஞ்சையில் ஜி.குஞ்சிதபாதம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் டி.செல்வம் போட்டியிடுவார் என பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நவம்வர் 19ம் தேதியன்று தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தலும், திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிடும், அதிமுக, திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். சிலர் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். வேட்புமனுத்தாக்கல் 26ம் தேதி தொடங்குகிறது.
இதனிடையே 3 சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் இன்று வெளியிடப்படுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். பாமக வேட்பாளர்கள் விவரம் வருமாறு:
அரவக்குறிச்சி - பி.எம்.கே. பாஸ்கரன்,
தஞ்சாவூர் - ஜி. குஞ்சிதபாதம்
திருப்பரங்குன்றம் - வழக்கறிஞர் டி. செல்வம்
இதன்மூலம் பாமக இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இனி, பாஜக, தேமுதிக வேட்பாளர்களை அறிவிக்கும் பட்சத்தில் இடைத்தேர்தலில் 5 முனை போட்டி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.