போயஸ் தோட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும்- கொங்குநாடு ஈஸ்வரன் வலியுறுத்தல்
சென்னை: போயஸ் தோட்டத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக பொய் கூறினோம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அண்மையில் கூறினார். இதன் மூலம் ஜெயலலிதா மரணம் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இதனை ஒப்புக்கொண்டுள்ள அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவை சந்திக்க யாரையும் அனுமதிக்காமல் சசிகலா குடும்பத்தினர் அவரை கொன்று விட்டதாகவும் மதுசூதனன் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கூறியது குறித்து கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார். திண்டுக்கல் சீனிவாசன் கூறியது குறித்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பல்லோ மருத்துவமனை மற்றும் ஜெயலலிதா வீடு அமைந்துள்ள போயஸ்கார்டனில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழகத்தில் குதிரை பேர ஆட்சி நடப்பதாகவும் அதனை ஆளுநர் தடுக்க வேண்டும் என்றும் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.