ராம்குமார் கைது முதல் சாவு வரை.. போலீசாருக்கு ஏன் இந்த பதற்றம்?
சென்னை: சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டது முதல், இப்போது அவர் தற்கொலை செய்துவிட்டதாக அறிவித்துள்ளது வரையில், காவல்துறையின் நடவடிக்கையில் ஒரு பதற்றம் தெரிவதாக கூறுகிறார்கள் இந்த வழக்கை உடனிருந்து கவனித்து வரும் கிரைம் ரிப்போர்ட்டர்கள்.
சுவாதி கொலை தொடர்பாக செங்கோட்டை அருகே, ராம்குமார் கைது செய்யப்படும்போது, அவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறினர் போலீசார். இது நம்பும்படியாக இல்லையே.. மீடியாக்களிடம் ராம்குமாரை பேசவிடாமல் செய்ய போலீசார் பொய் சொல்கிறார்களோ.. என்று ஒரு பேச்சு வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே ஒரு போட்டோ வெளியானது/வெளியிடப்பட்டது.
அந்த போட்டோவில் ராம்குமார் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டிருப்பதை போல காட்சி இருந்தது. அதாவது, ராம்குமார் தற்கொலைக்கு முயன்றார் என உலகத்திற்கு காட்டுவதற்காக அந்த போட்டோ எடுக்கப்பட்டதை போல இருந்தது.
படம் எடுப்பார்களா..?
குற்றவாளியை பிடிக்க முயலும் போலீசார், போட்டோ எடுத்துக்கொண்டிருப்பது நடைமுறை கிடையாதே.., என்ற கேள்வி அப்போதே பெரும்பாலான ஊடகங்களால் முன்வைக்கப்பட்டது.
நம்புறமாதிரி இல்லையே
இந்நிலையில், புழல் சிறையில், ராம்குமார் மின் வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக, போலீசார் கூறிவரும் நிலையில், அது நம்பும்படி இல்லை என்று பல்வேறு அமைப்புகளும், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சியினரும் கூறிவருகிறார்கள்.
புழல் சிறை கட்டமைப்பு
மின்வயர் மிகவும் தடிமனாக இருக்கும் என்பதால் அதை பல்லால் கடிக்க முடியாது என்றும், அது கடிக்கும் வகையில் தாழ்வாக வைக்கப்பட்டிருக்காது எனவும் புழல் சிறைக்குள் சென்று பார்த்த பலரும் கருத்து கூறிவருகிறார்கள்.
படம் ரிலீஸ்
இப்படி ஒரு சர்ச்சை வெளியான உடனேயே, சமூக வலைத்தளங்களில் ஒரு படம் வெளியாகியுள்ளது/வெளியிடப்பட்டுள்ளது. அந்த படத்தில், மின் பாக்ஸ் உடைக்கப்பட்டு உள்ளேயிருந்து வயர்கள் தொங்கி கொண்டிருப்பது போல காட்சியுள்ளது. அது கைக்கு எட்டும் உயரத்தில் இருப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது.
அவசரம், அவசரம்
கழுத்தை அறுத்த சர்ச்சையின்போது படம் வெளியானது போலவே, இப்போது, தற்கொலை என கூறும்போதும் ஒரு படம் அவசரமாக வெளியாகியுள்ளது. ஆனால் இரண்டுமே சட்ட விரோதமானது என்பது கவனிக்க வேண்டியது.
முறையற்ற செயல்
வழக்கில் கைதான நபரை அடையாள அணிவகுப்பில், அடையாளம் காட்டும் முன்பாக அவரது படத்தை வெளியிட கூடாது. ஏனெனில் இவர்தான் குற்றவாளி என சாட்சியம் சொல்பவர் மனதில் முன்கூட்டியே பதிந்துவிடும் என்பதால் சாட்சியம் சொல்பவர், குற்றவாளியை அடையாளம் காட்டும்வரை படத்தை மீடியாவோ வேறு யாருமோ வெளியிடக்கூடாது என்பது விதிமுறை.
ஏன் இந்த பதற்றம்
அதேபோல சிறைக்குள் உள்ள கட்டமைப்பையும் வெளியே காண்பிக்க கூடாது என்பது விதிமுறை. ஆனால், சாட்சி அணிவகுப்புக்கு முன்பே ராம்குமார் போட்டோ வெளியிடப்பட்டது. இப்போது, சிறை போட்டோவும் வெளியிடப்பட்டுள்ளது. இது காவல்துறை உதவியின்றி நடக்க கூடிய விஷயமா? போட்டோ லீக்கான விஷயங்களில் காவல்துறை இதுவரை யார் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதற்கான பதில் குழந்தைக்கும் தெரியும்.