பண மோசடி புகார்... ஆர்.கே.நகரில் ஜெ.வை எதிர்த்து போட்டியிட்ட பாமக பெண் வேட்பாளர் ஆக்னஸ் கைது!
சென்னை: பணமோசடிப் புகாரில் ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக பெண் வேட்பாளர் ஆக்னஸ் கைது செய்யப்பட்டார்.
பாமக மகளிரணி செயலராக இருப்பவர் ஆக்னஸ். இவர் கடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து பாமக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் குடிசைமாற்று வாரியம் சார்பில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை ஏழை எளிய மக்களுக்கும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.
இந்த வீடுகளை அப்பகுதியில் வசிப்போருக்கு பெற்றுத் தருவதாக கூறி தலா ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ஆக்னஸ் பெற்று இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதேநேரம் உறுதி அளித்தபடி இதுவரை யாருக்கும் வீடு பெற்றுத்தரவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.
பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஆக்னஸை போலீசார் கைது செய்துள்ளனர்.