சௌக்கார்பேட்டையில் போதை வஸ்து விற்ற பெண்... கும்பலோடு மடக்கிப் பிடித்த சென்னை போலீஸ்
பெண் ஒருவர் தலைமையில் தடை செய்யப்பட்ட மாவா, குட்கா, பான்மசாலா விற்கும் கும்பலை சென்னை போலீசார் கைது செய்துள்ளது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: வடசென்னைக்குட்பட்ட பகுதிகளில் மம்தா என்ற பெண் தலைமையில் இயங்கி வந்த போதை வஸ்து விற்பனை கும்பலை போலீசார் பிடித்துள்ளனர். அந்தக் கும்பலின் தலைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாவா, குட்கா, பான்மசாலா, உள்ளிட்ட பொருட்கள் சென்னை கடைகளில் திருட்டுத் தனமாக விற்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் யானைக்கவுனியில் இவற்றை விற்ற மனோகர் என்ற நபரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மனோகர் அளித்த தகவல்கள் அடிப்படையில், சௌகார்பேட்டை பகுதியில் ரகசியமாக செயல்பட்ட ஒரு கிடங்கில் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாவா, குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
போதை பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கின் உரிமையாளர் மம்தா, உதவியாளர் சோனு ஆகியோரை கைது செய்த போலீசார் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
பெண் ஒருவர் தலைமையில் போதை வஸ்து கும்பல் சென்னையில் இயங்கி வந்துள்ளது அந்தப் பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.