ஜெ. வீடு முன் மண் வாரி இறைக்கும் போராட்டம் நடத்த இருந்த மாணவி நந்தினி கைது
டாஸ்மாக் கடைகளை அடைத்து, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டி கோரிக்கை விடுத்து மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.
மாணவி நந்தினி பூரண மதுவிலக்கை அமல்படுத்தாமல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறந்துவைக்க அனுமதி வழங்கும் முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து மாவட்டந்தோறும் பயணம் சென்று , மதுவால் சீரழிந்த குடும்பத்தில் உள்ள பெண்களை சந்தித்து "யாருக்கும் ஓட்டு போட வேண்டாம். நோட்டோவுக்கு ஓட்டு போட்டு எதிர்ப்பை தெரிவியுங்கள்" என்று பிரச்சாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் சென்னைக்கு வந்த அவர் பல்வேறு மாவட்ட பெண்களில் குமுறல்களைக் மனதில் கொண்டு அவர்களின் சார்பாக முதல்வர் ஜெயலலிதா வீட்டு முன்பு நின்று மண்ணை வாரி இறைக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்தார்.
இன்று இந்த போராட்டத்தை நடத்தப்போவதாக சென்னை மெரினா கடற்கரையில் துண்டு பிரசுரம் விநியோகித்துக்கொண்டிருந்தார் நந்தினி. அவருடன் தந்தையும் உடனிருந்தார். துண்டு பிரசுரம் விநியோகித்துக்கொண்டிருந்த நந்தினியையும், அவரது தந்தையையும் போலீசார் கைது செய்தனர்.