ஹெல்மெட் அணியாததற்கு இப்படியா.. போலீசார் வாலிபர் தள்ளுமுள்ளு.. கொந்தளித்த மக்கள்! பரபரத்த சேலம்
சேலம் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சேலம்: சேலம் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர் ஒருவர், போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அந்த நபரை போலீசார் தாக்கியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
சாலை விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இதனால், விபத்துக்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
விபத்துக்களுக்கு வாகன ஓட்டிகளின் கவனக்குறைவு உள்பட பல காரணங்கள் இருந்தாலும் பெரும்பாலும் போக்குவரத்து விதி மீறல்களே விபத்துக்களுக்கும் விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் காரணமாக அமைகிறது.

போக்குவரத்து விதி மீறல்
இதனால், சாலைகளில் விதி மீறும் வாகனங்களை கண்காணித்து அபராதம் விதிக்கும் பணிகளில் போக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதுவும் திருத்தப்பட்ட புதிய வாகன மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் வசூலிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வந்தாலே சிக்னல் ஜம்பிங் செய்தாலோ ஆயிரக்கணக்கில் அபராதம் கட்ட வேண்டியிருக்கும். இதனால் விதி மீறும் வாகன ஓட்டிகள் சிலர் போக்குவரத்து போலீசாரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதைக் காண முடிகிறது.

போலீசாரிடம் கடும் வாக்கு வாதம்
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர் ஒருவர், போக்குவரத்து போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அந்த நபரை போலீசார் தாக்கியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அயோத்தியாபட்டனம் டோல்கேட் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

ஹெல்மட் அணியாமல் வந்துள்ளார்
அப்போது பெரம்பலூர் மாவட்டம் அடையாளப்பட்டியை சேர்ந்த மனோகர் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அப்போது மனோகர் ஹெல்மட் அணியாமல் வந்துள்ளார். இதனால் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மனோகரை நிறுத்தி ஹெல்மட் அணியாததற்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் மோட்டார் சைக்கிள் ஆவணங்களை கேட்டுள்ளனர். அப்போது அவரிடம் மோட்டார் சைக்கிளுக்கான உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

சாலை மறியலில் ஈடுபட்ட வாலிபர்
இதனால் போலீசார் மனோகருக்கு அபராதம் விதித்துள்ளனர். ஆனால் மனோகர் தன்னிடம் பணம் இல்லை என்றும் அபராத தொகையை ஆன்லைன் மூலமாக அனுப்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக போலீசாருக்கும் மனோகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் வாலிபர் மனோகர் திடீரென சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும்?
இதையடுத்து போலீசார் அவரை அப்புறப்படுத்தி போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அப்போது வாலிபர் மனோகர் போலீசாரிடம் ஹெல்மட் அணியாததற்கு இப்படியா பண்ணுவீங்க என பேசுகிறார். அங்கு கூடியிருந்த பொதுமக்களும் ஹெல்மெட் அணியாத குற்றத்திற்கு காவல் நிலையம் அழைத்து செல்வீர்களா என்று கேள்வி எழுப்பினர். இதனால் போலீசார் அந்த வாலிபரை விட்டு விட்டு சென்றனர். ஹெல்மெட் அணியாத குற்றத்திற்கு வாலிபரிடம் ஏன் இந்த அளவிற்கு கடுமையாக போலீசார் நடந்து கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications