திருச்சியில் தடையை மீறி நீட் கண்டன பொதுக்கூட்டம்- ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
திருச்சியில் திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மேடைக்கு வந்துள்ளனர்.
திருச்சி: திருச்சி மாநகர காவல்துறை தடை விதித்துள்ள நிலையில் திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பொதுக்கூட்ட மேடைக்கு வந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணவி அனிதாவை நீட் தேர்வு காவு கொண்டது. மருத்துவ கனவு சிதைந்து போனதால் கடந்த 1ஆம்தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அனைத்து இடங்களிலும் போராட்டமும் வெடித்துள்ளது.
குழுமூர் வந்த மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று கூறினார். அதன்படி நடந்த கூட்டத்தில் மாணவி அனிதாவின் உயிரிழப்புக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தியும் செப்டம்பர் 8ஆம்தேதி அனைத்து கட்சி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் இன்று மாலை 5 மணி அளவில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கூட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின்,கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருமாவளவன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது.
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனையடுத்து திருச்சியில் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினர் தற்போது அனுமதி மறுத்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பினை அடுத்து அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளார்.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வந்துள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன், ஆகியோருடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
Recommended Video
அதே நேரத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்ட இடத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்களும், முக்கிய தலைவர்களும் குவிந்துள்ளனர். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் தொல். திருமாவளவன்,கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் பொதுக்கூட்ட மேடைக்கு வந்துள்ளனர்.
தடையை மீறி பொதுக்கூட்டம் நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து கொண்டுள்ளனர்.