நரிக்குறவர்கள் பொய் சொல்ல மாட்டார்களா.. யாருப்பா சொன்னது.. துறையூர் கலாட்டாவை பாருங்க!
14 வயது சிறுமியின் திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
துறையூர்: மொழி மற்றும் கலாச்சார வேறுபாடு காரணமாகவும், இதர குடிமக்களோடு பழகுவதில் பெரிய சிக்கல் ஏற்படுவதாலும் நரிக்குறவர்கள், சமுதாயத்தில் யாருடனும் கலவாமல் தனித்தே வாழத்தொடங்கினர். நரிக்குறவர்களில் பெண்கள் வயதுக்கு வந்தவுடன் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்றும், எந்த சூழ்நிலையிலும் அவர்கள் திருடுவதோ, பொய் சொல்வதோ கிடையாது என்றும் கேள்விப்பட்டதுண்டு. அதன்படி, இன்றுவரை யாரையும் சுரண்டாமல் கடினமாக உழைத்தே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், அதில் ஒருசிலர் தவறுகளையும் செய்ய நேர்ந்துவிடுகிறது. அதற்கு துறையூரில் நடைபெற்ற இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக உள்ளது.
துறையூரை அடுத்து மதுராபுரி நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு ஆனந்த் என்ற 25 வயது நபருக்கும், அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் அவர்களது வழக்கப்படி குலதெய்வம் கோயிலில் திருமணம் நடக்க உள்ளதாக சைல்ட் ஹெல்ப் லைன் மற்றும் துறையூர் கிராம சேவிகா கோமளா ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் அவர்கள் அந்த காலனிக்கு சென்று, மணக்கோலத்தில் இருந்த 14 வயது சிறுமியை பார்த்தார்கள். பின்னர் திருமண வீட்டார்களிடம், "இன்னும் கொஞ்ச நேரத்தில் திருமணம் நடப்பதாக கேள்விப்பட்டோம், 14 வயது சிறுமிக்கு திருமணம் செய்யக்கூடாது" என்று அறிவுரை சொன்னார்கள். ஆனால் இதனை இரண்டு குடும்பத்தாரும் பொருட்படுத்தாமல் திருமணத்திற்கான சடங்குகளை செய்ய தொடங்கினர்.
மறைத்துவிட்டனர்
இதனால் அதிகாரிகளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல், துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் நரிக்குறவர் காலனிக்கு சென்றனர். அதற்குள் திருமணத்திற்கான சடங்குகள் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தது. போலீசார் காலனிக்குள் வருவதை தெரிந்து கொண்ட நரிக்குறவர்கள், மாப்பிள்ளை பக்கத்திலிருந்த 14 வயது சிறுமியை அவசர அவசரமாக அழைத்து கொண்டு போய் வேறு ஒரு வீட்டில் மறைத்து விட்டனர்.
திடீர் மணப்பெண்
உடனே, மாப்பிள்ளையின் உறவினரான கவுசல்யா என்பவரை மணப்போல் அலங்கரித்தனர். கவுசல்யாவோ ஏற்கனவே திருமணமானவர். வயது 25. அவருக்கு ஒரு மாலையை அணிவித்து மாப்பிள்ளை ஆனந்த் பக்கத்தில் உட்காரவும் வைத்துவிட்டனர். இப்போது உள்ளே நுழைந்த போலீசார், அங்கிருந்தோரிடம் "14 வயது ஆகும் ஒரு மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்யக்கூடாது" என்றனர். அதற்கு நரிக்குறவர்களோ, "இல்லையே... இந்த பெண்ணுக்கு 25 வயது ஆகிறதே? நாங்கள் ஒன்றும் மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்யவில்லையே?" என்றனர்.
இது மணப்பெண் இல்லையே
இப்படி உறுதியாக நரிக்குறவர்கள் சொன்னாலும் போலீசாருக்கு ஏதோ தவறாகவே பட்டது. அதற்குள் கிராம சேவிகா கோமளா அங்கு வந்துவிட்டார். அங்கிருந்த பெண்ணை கண்டதும் அதிர்ச்சி அடைந்து, "இது மணப்பெண் இல்லையே, அவள் சிறுமி, அவளை நான் பார்த்திருக்கிறேன். அவள் முகம் நன்றாக தெரியும். இந்த பெண் வேறு யாரோ" என்றார். இதையடுத்து போலீசார் காலனி முழுக்க சல்லடை போட்டு தேட ஆரம்பித்தனர். அப்போது ஒரு வீட்டினுள் கல்யாண புடவைக்கு பதில் வேறு ஒரு உடையை மாற்றிக் கொண்டு, சிறுமி இருந்ததை கண்டுபிடித்தனர்.
கடும் எச்சரிக்கை
பின்னர் சிறுமியிடம் போலீசார் விசாரிக்க ஆரம்பிக்கும்போதே, அவள் அனைத்தையும் சொல்லிவிட்டாள். இதையடுத்து நரிக்குறவர்கள் தங்களையே இப்படி ஏமாற்றி விட்டார்களே என்பதால் அதிர்ச்சியடைந்த போலீசார், திருமணம் நடத்தி வைக்க முயன்ற இரு வீட்டார் மற்றும் மாப்பிள்ளை ஆனந்த் ஆகியோரை காவல்நிலையம் அழைத்து வந்து வன்மையாக கண்டித்தனர். இன்னொருத்தர் மனைவியாக இருந்தும் மாலையை போட்டுக் கொண்டு மாப்பிள்ளை பக்கத்தில் உட்கார துணிந்த கவுசல்யாவையும் போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர். இறுதியில், சிறுமி குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாள். இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், "மாப்பிள்ளை ஆனந்து"க்கு இது 3-வது திருமணமாம்!!!!