வடிவேலு மகன் திருமணத்தில் பரபரப்பு.. மணப்பெண் மைனர் என்ற தகவலால் விசாரணைக்கு வந்த போலீஸ்!
மதுரை: நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மகன் சுப்பிரமணியன் திருமணம் நேற்று மதுரையில் நடந்தது. அப்போது மணப்பெண் திருமண வயதை எட்டாத மைனர். அவரை கட்டாயப்படுத்தித் திருமணம் செய்வதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸாரும், சமூக நலத்துறை அதிகாரிகளும் கல்யாண மண்டபத்திற்கு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் மணப்பெண் 18 வயதைத் தாண்டியவர் என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து அனைவரும் திரும்பிச் சென்றனர்.
இது யாரோ வேண்டாதவர்கள் கிளப்பி விட்ட புரளி, உள்நோக்கத்துடன் கொடுத்த புகார் என்று வடிவேலு கூறியுள்ளார்.
நிம்மதியாக தனது இல்லத் திருமணத்தை நடத்த இயலாத நிலையில் இருக்கிறது வடிவேலுவின் நிலைமை. தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய வடிவேலு, தேவையில்லாத அரசியல் பிரவேசத்தால் பெரும் மனச் சங்கடத்துக்குள்ளாக நேரிட்டது. இதன் காரணமாக கடந்த 2013ம் ஆண்டு தனது மகள் திருமணத்தை கிட்டத்தட்ட ரகசியத் திருமணம் போல நடத்தினார் வடிவேலு.
நேற்று அவரது ஒரே மகன் சுப்பிரமணியனின் திருமணம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதையும் மிகவும் எளிமையாக, அமைதியாக, சத்தமின்றி நடத்தினார் வடிவேலு.
மணப்பெண் திருப்புவனத்தைச் சேர்ந்தவர். வடிவேலு மனைவி வழியில் சொந்தம். திருமணத்திற்கு இரு வீட்டாரும், இரு வீட்டாரின் மிக மிக நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே வந்திருந்தனர்.
இந்த நிலையில் திருமணம் நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு திடீரென மண்டபத்திற்கு தல்லாகுளம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கெளசல்யா மற்றும் போலீஸார், சமூக நலத்துறை அதிகாரிகள் வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மணமகள் புவனேஸ்வரிக்கு இன்னும் திருமண வயது வரவில்லை என்றும், அவரைக் கட்டாயப்படுத்தி திருமணம் நடத்தப்படுவதாகவும் தங்களுக்குத் தகவல் வந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து மணமகளிடம் நீங்கள விசாரியுங்கள் என்று வடிவேலு அவராகவே முன்வந்து விசாரணைக்கு ஒத்துழைத்தார். மேலும் சிவகங்கை மாவட்ட கல்வி அதிகாரியைத் தொடர்பு கொண்டு புவனேஸ்வரியின் கல்விச் சான்றிதழை ஆய்வு செய்து தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார். இந்த விசாரணையில் கட்டாயக் கல்யாணம் நடைபெறவில்லை என்றும், புவனேஸ்வரிக்கு 18 வயது முடிந்து விட்டதும், அது முடிந்து 7 மாதங்கள் ஆகி விட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து விசாரணைக்கு வந்த அதிகாரிகள் திருமண மண்டபத்தை விட்டு கிளம்பிச் சென்றனர். இது வேண்டாதவர்கள் கிளப்பி விட்ட உள்நோக்கம் கொண்ட புகார் என்று வடிவேலு கூறியுள்ளார்.